1.காந்தி நேரு பற்றி இப்போது எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வர தொடங்கி இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
தப்பென்ன? உலகெங்கும் கென்னடி போன்றவர்களை பற்றியெல்லாம் விமர்சனங்கள் வருகின்றன. ஆரோக்கியமான முறையில் அவர்கள் அலசப்படுவதில் என்ன தவறு?ஆனால் அளவுக்கு அதிகமாக -Hitting below the belt- பண்ணக்கூடாது. தங்கள் தரப்பை சொல்லி தற்காத்துக் கொள்ள அவர்களால் முடியாது அல்லவா?!
2.உங்கள் பாத்திரப்படைப்புகளான முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்பு திருடன் போன்றவர்களை அனிமேஷனில் கொண்டு வந்தால் அவர்கள் உலகப் புகழ் பெறுவார்கள். அதற்கு முயற்சி செய்கிறீர்களா?
அனிமேஷன் உலகம் என்பது ஒரு தனிப்பெரும் உலகம். என்னால் தனிப்பட்ட முறையில் ஏதும் செய்ய முடியாது. யாரவது முன் வந்தால் செய்யலாம். ரொம்பப் பெரிய வேலை அது!
3.முதல் முதல் கார் சவாரி எப்போது? முதல் முதல் விமானப்பயணம் எங்கு ? ஆங்..கப்பல்??
நான் பிறக்கும்போதே வீட்டில் கார் இருந்தது. ஆகவே குழந்தையாகவே காரில் ரவுண்ட் அடித்தாகிவிட்டது.அப்பா அப்போதைய மவுண்ட் ரோடு ரவுண்டானாவில் வண்டியை 'பார்க்' செய்துவிட்டு எங்களுக்கு ஜாஃபர்ஸ் என்கிற புகழ்பெற்ற கடையில் ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். அது ஒரு வாழ்வு!விகடனில் இணைந்து கார்ட்டூனிஸ்ட் ஆன பிறகு எம்.டி கார் குடுத்தார். பெங்களூரில் இந்திய கார்ட்டூனிஸ்ட்களின் கண்காட்சி நடந்தது. அதில் கலந்து கொள்ள விமான பயணம். கப்பல் நின்று கொண்டிருக்கும் போது தான் போயிருக்கிறேன்! ஒரு நண்பர் விருந்து கொடுத்தார். லேசாக உடல் ஆடிக்கொண்டே இருக்கும்!.
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com
Leave a comment
Upload