தொடர்கள்
ஆரோகியம்
கண்ணே ...கண்ணே ! - மரியா சிவானந்தம் 

20230006192211222.jpg

உள்ளம் பெருங்கோயில் ,ஊனுடம்பு ஆலயம் - திருமூலர்

கல்லாலும் மண்ணாலும் கட்டப்படும் ஆலயங்களை விட, தூய்மையான உள்ளமும் அதைத் தாங்கும் உடலும் பேராலயம் என்பது நாம் அனுபவித்து அறியும் உண்மை . நல்ல உடல் நலனை விட பெரிய செல்வம் வேறில்லை .

உள்ளமும், உடலும் கோவிலெனில் அக்கோவிலில் சுடர் விட்டு பிரகாசிக்கும் இரு தீபங்கள் நம் கண்கள்.இப்பிறவியில் பிரபஞ்சத்தின் எழிலையும், இயற்கை வாரித் தந்த காட்சிகளையும் அள்ளிப் பருக நமக்கு இறைவன் தந்த வரப்பிரசாதம் கண்கள் . ஒரு பார்வை அற்றவர்களின் இல்லத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் , அவர்கள் தவற விடும் இனிமைகள் நம் முன் வரிசை கட்டி நிற்கின்றன . பழக்கத்தால் ,பயிற்சியால் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ அவர்கள் முயற்சி செய்வதைப் பார்க்கையில் , அவர்கள் அறியாமல் நம் விரல்கள் நம் கண்ணீரைத் துடைத்துக் கொள்கின்றன . .

பார்வைக் குறைபாடுகளில் இருந்தும், நம் கண்களைத் தாக்கும் நோய்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். இக்காலம் கண்ணும், கையும் , மூளையும் ஒருங்கிணைத்து வேலை செய்ய வேண்டிய கணினியின் காலம் . இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பிலேயே கணினி கற்பவர் , பின் வாழ்நாள் முழுவதும் அதன் இயக்கத்துடன் நம் வாழ்க்கை இயைந்து விடுகிறது .

20230006192902218.jpg

எல்லா இடங்களிலும் , எல்லா நிலைகளிலும்,கணினியின் தொடர்பு பிரிக்க முடியாத பந்தமாகி விட்டது. தவிர, பொழுதுபோக்குக்கு தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்றாகி விட, நம் விழித்திரையில் பிம்பங்கள் ஓய்வின்றி விழுந்துக்கொண்டே இருக்கின்றன . விளைவு இளம் வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டி வருகிறது. உலர் கண்கள் (Dry Eyes) என்னும் குறைபாடு ஏற்பட, அதற்கு மருந்தும், சரியான இடைவெளியில் கண்ணுக்கு ஓய்வும் தர வேண்டியது அவசியமாகி விட்டது

வயதாக நம் கண்ணில் புரை (cataract) என்னும் கோளாறு வந்து விடுகிறது .இந்த நோய் வந்தவர்களுக்கு , விழித்திரையில் விழும் ஒளியின் அளவு குறைகிறது . பார்வை மங்கலாய் தெரியும். .கண் வில்லை (crystalline lens) பகுதி மஞ்சளாகி மாறி விழித்திரையில் ஒளி புகாதவாறு தடுக்கப்படுகிறது. இதற்குத் தீர்வு கண் புரை முற்ற , அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்ய வேண்டி வருகிறது.

20230006192247262.jpg

வயதானவர்களுக்கு வரும் மற்றும் ஓர் கண் வியாதி கண்ணில் ஏற்படும் அழுத்த நோய் (Glaucoma ).உள்விழி அழுத்தம் அதிகரித்த நிலை, பார்வை நரம்புகளில் குறைபாடு ,மரபணு குறைபாடு போன்ற காரணங்களால் நீர் அழுத்த நோய் ஏற்படுகிறது . இந்த நோய் வந்து பல வருடங்கள் ஆன பின்பும் , பெரிய பாதிப்புகள் இன்றி இருப்பவரும் உண்டு, சில ஆண்டுகளில் அதிக பாதிப்பு அடைந்தவரும் உண்டு.தொடர் சிகிச்சை ,மருந்துகளை உபயோகித்தல் பயனளிக்கும்.

20230006192324643.jpg

மேற்கூறிய கண் நோய்கள் நாம் அனைவரும் அறிந்து விழிப்புடன் காத்துக் கொள்ள முனைபவை .எனினும் பெரிய விழிப்புணர்வு இன்றி, பார்வையே பறி போகும் நிலைக்குத் தள்ளும் நோய் எனில் அது நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோய் (Diabetic Retinopathy), இதயம் ,சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளைத் தாக்கும் நீரழிவு ,கண்களை விட்டு வைப்பதில்லை. விழித்திரையில் உள்ள நுண்ணுய்யா இரத்தநாளங்கள் ,நீரிழிவின் தாக்கத்த்ல் புடைத்து ,உடைந்து விழித்திரையில் ரத்தம் பரவுகிறது. இந்த ரத்தக்கசிவு மேலும் ,விழித்திரையில் பின்பகுதியிலும் ஏற்படுகிறது

எங்கள் மகள் Dr .சுபா பூபதிராஜன் கண் அறுவை சிகிச்சை நிபுணர். தன் மேற்படிப்பின் போது விழித்திரை நோய் பற்றி ஆய்வு மேற் கொண்டார். அவர் கூறுகையில் , "நீரழிவு உள்ளவர்கள் , அந்நோயை கட்டுக்குள் கொண்டு வைத்திருப்பது மிகவும அவசியம். அதைப் போலவே கண் மருத்துவரிடம் சென்று கண் பரிசோதனை ,விழித்திரை பரிசோதனைகளை சரியான இடைவெளியில் மேற்கொள்வது மிகவும் அவசியம் . நான்கு நிலைகளில் இந்த நோயின் தாக்கம் காணப்படும் . துவக்க நிலை , விழித்திரையில் புள்ளிகள் (Diabetic maculopathy ) , இறுதி நிலைக்கு முந்திய நிலை ,இறுதி நிலை . பார்வை இழப்புக்கு நீரழிவு காரணமாகிறது . சரியான நேரத்தில் ,முறையான அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் ,நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும் " என்று அவர் எச்சரித்தார் .

20230006192400280.jpg

மக்கள் அதிகம் அறியாத மற்றுமோர் கண் வியாதி மாலைக்கண் எனப்படும் ஆர்.பி என்று அழைக்கப்படும் ரேட்டினிடைட்டிஸ் பிக்மென்டோசா (Retinitis pigmentosa) மாலைக்கண் என்றாலே , வைட்டமின் A குறைபாடு என்ற அளவுக்கே நாம் அறிவோம் .ஆனால் ஆர்.பி மரபணு குறைபாட்டால் ஏற்படும் கொடிய நோய், இந்த நோயின் ஆரம்பகட்டத்தில் குழந்தைக்கு பகல் வேளையில் கண் நன்றாகத் தெரியும். இருட்ட ஆரம்பித்த பிறகும் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையிலும் அந்தக் குழந்தை பார்வை சரியாக இல்லாமல் மிகவும் சிரமப்படும். ஒரு கட்டத்தில் இருட்டில் செல்லவே பயப்படும். உறவில் திருமணம் செய்துக் கொள்வது,ஏற்கனவே இந்த குறைபாடு மூதாதையர் யாருக்கேனும் இருத்தல் என்று பல காரணம் உண்டு .

20230006192449253.jpg

இவ்வியாதி வந்தவர்களுக்கு நடுப்பார்வை (Central vision ) சில காலம், ஏன் பல ஆண்டுகளுக்கும் நன்றாக இருக்கும் ,பக்கவாட்டு பார்வை (Peripheral vision) குறைந்துக் கொண்டே போய் ,இரவில் மட்டுமன்றி பகலிலும் நிலைத்தடுமாறும் சோகம் ஏற்படும். முழுமையாக இளம்வயதிலேயே பார்வை இழப்பவர்கள் உண்டு. இவ்வியாதியைக் குணப்படுத்தவோ, முழுமையாக கட்டுக்குள் கொணரவோ இன்னும் மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை .ரஷ்யாவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு. இன்றும் ஆராய்ச்சி நிலையில்தான் இன்னுமிருக்கிறது .

கண்பார்வை என்பது கடவுள் தந்த பெரிய வரம் , அதை சீரிய முறையில் பாதுகாப்பது நமக்கும் ,நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை தரும்.

கண் நலம் பாதுகாப்போம் !