நம் நாட்டின் விழாக்களில் மிக முக்கியமானது நவராத்திரி அதிலும் மைசூர் நவராத்திரி மற்றும் பத்து நாள் தசரா விழா என்பது உலக பிரசித்தி பெற்றது .
மைசூர் தசரா விழாவை பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டோம் .
முதுமலை பண்டிப்பூரிலும் கூட்டம் தான் .
நாம் மைசூருக்கு செல்ல எல்லா ஹோட்டல்களும் ஃபுல் .
ஆர் .எஸ் .நாயுடு நகரில் உள்ள குழந்தை ஏசு ஆலய புஷ்பாஷ்ரமம் விடுதியில் இடம் கிடைத்து தங்கினோம் .
சொந்த வாகனத்தில் யாரும் நகருக்குள் வரவேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோளுக்கு இணங்க நம் காரை நாம் தங்கின இடத்தில் விட்டுவிட்டு பஸ்சில் நகருக்கு சென்றோம் .
மாலை 7.30 மணிக்கு மைசூர் நகர் முழுவதும் அலங்கரித்துள்ள மின் விளக்குகள் ஆன் செய்ய நகரே பகல் போல ஜொலித்தது .
குதிரை சவாரி செய்யும் ஜட்கா வண்டி கூட அழகான மின்விளக்கால் பளிச் சென்று பிரகாசித்து கொண்டிருந்தது .
எல்லா வீதியும் அரசு கட்டிடங்கள் என்று எங்கு திரும்பினாலும் ஓளி மையம் தான் .
நாம் மைசூர் பேலஸ் வளாகத்தினுள் நுழைந்தோம் அப்பப்பா அரண்மனை முழுவதும் மின் விளக்குகளால் மின்னி கொண்டிருந்தது .
ஒரு லட்சம் பல்புகள் அலங்கரித்து கொண்டிருந்தன .
எங்கு திரும்பினாலும் மின் விளக்கு அலங்காரங்கள் ஜொலித்து கொண்டிருக்கு இரவு பதினோரு மணிவரை மைசூரு பளிச் தான் .
நகரின் மின் விளக்கு அலங்காரங்கள் இந்த மாதம் 23 ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது .
21 நாட்களில் 2,42,012 யூனிட் மின்சாரம் செலவு என்கின்றனர் மின்சார வாரியம் .
நகரின் வெளிச்சத்தால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை அனைத்து சென்று கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது .
கர்நாடக அரசு 6.5 கோடி மின் அலங்காரங்களுக்கு மட்டும் செலவு செய்துள்ளது .
இந்த வருடம் மட்டும் 130 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மின் விளக்கு அலங்காரம் இடம்பெற்றுள்ளது .
நகரில் உள்ள 100 சரக்கிள்கள் மற்றும் 65 ஆர்ட் வொர்க் பளிச் என்று காட்சியளிக்கிறது .
கர்நாடக வாசிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநில மக்களும் குவிந்திருந்தனர் .
அடுத்த நாள் காலை சாமுண்டி கோயிலுக்கு மலை ஏறினோம் ஏகப்பட்ட வாகன நெரிசல் .
கோயிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர் .
சாமுண்டேஸ்வரி அம்மன் நகர் வலம் வருவதற்கு முன் தரிசனம் செய்துவிடவேண்டும் என்று தான் வந்துள்ளோம் என்று கூறினார்கள் .
காவல் துறையினர் கோயிலுக்கு முன் நின்று செலஃபீ எடுத்து கொண்டனர் .
அடுத்து நாம் விசிட் செய்தது... கே .ஆர் .எஸ் .பிரிந்தாவன் கார்டன் . மாலை நான்கு மணிக்கு உள்ளே நுழைய அவ்வளவாக கூட்டமில்லை .
எப்பொழுதும் அழகாக காட்சியளிக்கும் பிரிந்தாவன் அழகை இழந்திருந்தது .பூக்கள் கூட மிஸ்ஸிங் .
நீரூற்றுக்கள் அமைந்துள்ள இடமெல்லாம் பராமரிப்பு கட்டுமானங்கள் நடந்து கொண்டிருந்தன .தசரா கொண்டாட்ட சமையத்தில் ஏன் இந்த பணி என்று யோசிக்க வைத்தது .
மாலை 6.30 மணிக்கு மின் அலங்கார விளக்குகள் பிரகாசிக்க துவங்கின .
கே .ஆர் .எஸ் அணை சுவற்றில் தேசிய கொடியின் மூவர்ண ஒளி மற்றும் பிருந்தாவன் முழுவதும் மின் விளக்குகள் கண்ணை கவர்ந்தன .
மாலை மின் விளக்கு அழகை ரசிக்க மக்கள் கூட்டம் மொய்த்து விட்டது .
மைசூர் தசரா விழா அரண்மனைக்கு சொந்தமானது என்பது தான் பாரம்பரியம் .
1610 ஆம் வருடம் ராஜா உடையார் துவக்கி வைத்தது தான் தசரா விழா .
ஒன்பது நாள் நவராத்திரி விழாவை மஹிஷாசுரா என்ற கொடூரனை சாமுண்டி அம்மன் வீழ்த்தின நினைவை தான் தசரவாக கொண்டாட துவங்கினார்கள் .இந்த விழாவே மைசூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது .
மைசூரு என்ற பெயர் மஹிஷாசுர் என்ற பெயரில் உருவானது .
மஹிஷாசுரா நகராக ஒரு காலத்தில் மைசூரு இருந்துள்ளது .
அரச குடும்பத்தினரின் தலைமையில் தசரா விழா சிறப்பிக்கப்படுகிறது .
ஆரம்பத்தில் ஸ்ரீரங்கபட்டணம் தான் மைசூர் தலைநகர் பின்னர் மைசூர் தலைநகராக மாற்றப்பட்டது .
தசரா விழாவின் மிக முக்கியமான ஒன்று 'அம்பாரி ஊர்வலம்'
அல்லது 'ஜம்போ சவாரி '
ஸ்ரீ ஜெயச்சந்திர உடையார் தான் கடைசிமைசூர் மகாராஜா அவர் தான் கடைசியாக யானை மேல் அம்பாரியில் அமர்ந்து தசரா ஊர்வலத்தில் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
அதன் பின் சாமுண்டீஸ்வரி அம்மன் தான் அம்பாரி ..ஜம்போ சவாரியில் பவனி வருகிறார் .
அரண்மனை தங்க சிம்மாசனத்தில் அரசர் தான் தசரா விழா தர்பாரில் அமருவார் .
2013 யில் ஸ்ரீ கண்டத்தா நரசிம்மராஜ உடையார் இறந்த பின் அரசரின் போர் வாள் தங்க சிம்மாசனத்தில் வைக்கப்பட்டதாம் .
இந்த தசராவிற்கு அரசராக மைசூர் எம் .பி . யாதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் தலைமையில் தசரா விழா நடந்தது .
கடந்த 3 ஆம் தேதி முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவகுமார் தசரா விழாவை துவக்கி வைத்தனர் .
தினமும் நகர் முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்கள் அரங்கேறின .
12 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சாமுண்டி கோயிலுக்கு அரசர் யாதுவீர் சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அம்மனை யானை பவனியில் அரண்மனைக்கு அழைத்து வந்தனர் .
மதியம் 2 மணிக்கு
தசரா அம்பாரி ஊர்வலத்தை முதல்வர்கள் மற்றும் அரசர் மலர் தூவி புறப்பட செய்தனர் .
14 யானைகள் பவனியில் வர சாமுண்டேஸ்வரி அம்மனை 750 கிலோ எடைகொண்ட அம்பாரியில் அபிமன்யு என்ற மூத்த யானை தன் மேல் சுமந்து வந்தது .
அம்பாரி 80 கிலோ தங்க ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்தது .
அரண்மனைக்கு சொந்தமான தங்க அம்பாரியை மாவட்ட நிர்வாகத்திடம் 12 ஆம் தேதி அரச குடும்ப தலைவி பிரமோதா தேவி உடையார் தாமதமாக ஒப்படைத்தார் என்ற சர்ச்சை பத்திரிகையில் வெளிவர அதை அவர் மறுத்துள்ளார் .
இந்த வருட தசரா விழாவின் முக்கிய நிகழ்வுகள் ட்ரொன் ஷோ 1500 டிரோன்கள் தினமும் இரவு 8 மணிமுதல் 8.15 வரை வானத்தில் அதிசியக்க செய்தது இதற்கான செலவு 3 கோடி மட்டுமே !.
இந்த வருட தசரா விழாவின் சிறப்பான தகவல் மற்றும் மைசூருக்கு கிடைத்த பரிசு கடந்த வெள்ளிக்கிழமை 11 ஆம் தேதி காலை அரசர் யாதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் மனைவி த்ரிஷிகா குமாரி உடையார் தம்பதிக்கு இரண்டாவது மகன் பிறந்துள்ளான் என்ற செய்தியை கேட்டு மைசூர் அரண்மனையே உட்சாகத்தில் மூழ்கியது .
இந்த அரச தம்பதியினருக்கு 2017 டிசம்பர் மாதத்தில் ஆதியாவீர் நரசிம்மராஜ உடையார் என்ற மகன் பிறந்தார்.
மைசூருக்கு தசரா விழா சமையத்தில் அரசு இளைய வாரிசு உதயமானது நல்ல சகுனமாம் !.
அரச குழந்தை பிறப்பையொட்டி
விஜயதசமி அன்று அரண்மனை குரு ப்ரஹலாத் ஆச்சாரியர் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார் .
இந்த வருட தசரா ஸ்பெஷல்.. முதல் முறையாக இளையராஜா மற்றும் ஏ .ஆர் .ரகுமானின் இன்னிசை இரவு 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கலக்கலாக நடந்தேறியது .
திரைப்பட தயாரிப்பாளர் அஸ்வினி புனித் ராஜ்குமார் யுவ தசரா என்ற நிகழ்வை உத்தனஹள்ளியில் துவக்கிவைத்துள்ளார் .
கன்னடா , தமிழ் , இந்தி ,மலையாளம் கொங்கினி பாடல்கள் பாடி கலக்கிவிட்டனர் .
ஷெகாகோஷல் தன் குரலால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டார் .
இவ்வளவு பெரிய தசரா விழாவை முன்னின்று சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் கன்னடா மற்றும் கலாச்சார அமைச்சர் மாகாதேவப்பா .
12 ஆம் தேதி சனிக்கிழமை மைசூரில் பலத்த மழை சாமுண்டி அம்மன் சிலையை தாங்கின ஜம்போ சவாரி துவங்கி லட்ச கணக்கான மக்கள் சாலைகளின் இருபுறமும் நின்று வரவேற்று ரசித்தனர் .
மக்கள் வெயில் மழையில் நின்று அம்பாரியை பார்க்க வசதியாக எல்லா நடைபாதை முழுவதும் ஷாமினா அமைக்கப்பட்டிருந்தது மிக சிறப்பான விஷயம் .
31மாவட்ட அலங்கார ஊர்திகள் பவனியில் வர ஒரு ஊர்தியில் புத்தர் , அம்பேத்கார் உருவ படங்கள் இருக்க உடன் பெரியாரின் படம் இருந்தது ஆச்சிரியம் தான் .அதே சமயம் "சாமுண்டேஸ்வரி அம்மன் பவனியில் தரிசனம் கொடுக்க எப்படி பெரியார் படம் இடம்பெறலாம் " என்று விஜயபுரா சட்டமன்ற உறுப்பினர் பசவனகுடா பாட்டில் மற்றும் பா. ஜா. கா வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .
" நட ஹப்பா " மாநில விழாவான தசரா முடிவுக்கு வர மாலை நகரில் ஏகப்பட்ட கூட்டம் போக்குவரத்து நெரிசல்
நாம் ட்ரொன் ஷோ பார்த்துவிட்டு டின்னர் முடித்த கையோடு நம் இருப்பிடத்திற்கு திரும்பி வர பெங்களூரு சாலையில் ஏகபட்ட ட்ராபிக் ஜாம் இன்ச் இன்ச் ஆக நகர்ந்து இரவு 9 மணிமுதல் 12 மணிவரை சிக்கி தவித்தோம் .
எல்லா வாகனங்களும் தங்களின் ஹரன்களை அழுத்த காது கிழிய சப்தம் ...காவல் துறை திணறி கொண்டிருந்தார்கள் .
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெங்களூரை நோக்கி சென்ற பின் தான் ட்ராபிக் க்ளியர் ...செய்யப்பட்டது மிகவும் வேதனை மற்றும் எரிச்சலான விஷயம் .
மைசூரு 21 நாள் தசரா விழாவுக்கு ஆனா செலவு எவ்வளவு தெரியுமா ஜஸ்ட் 40 கோடி தான் .
அருமையான தசரா விழாவை கண்டு களித்த திருப்தியுடன் மைசூரை விட்டு விடை பெற்றோம் .
Leave a comment
Upload