தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில், திருக்கோவிலூர் நகருக்கு அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் அந்திலி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது, கருட பகவானின் கடும் தவத்தினால் உருவான கோயில் என்பதினால் கருட வடிவில் இருக்கும் பாறையின் மேல் அமைந்துள்ளது. ஶ்ரீமகாவிஷ்ணு தனது நரசிம்மர் அவதாரத்தில் தூணிலிருந்து தோன்றி இரணியனை அழித்து, தன் பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றி தரிசனம் தந்ததை போல் தனது வாகனமான கருட பகவானுக்கு நரசிம்மராகக் காட்சி தந்த ஸ்தலம். இந்த கோயிலில் வருடத்தின் 365 நாட்களும் லட்சுமி நரசிம்மர் மீது சூரிய ஒளி படுவது தலத்தின் சிறப்பம்சமாகும். இந்த கோயிலுக்குப் பல மகான்கள் வந்து தரிசித்துச் சென்றுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.
ஸ்தல புராணம்:
மகாவிஷ்ணு தனது வாகனமான கருட பகவானுக்கு, நரசிம்மராக காட்சி தந்த ஸ்தலம் இது. உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் மகாவிஷ்ணு, குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனைக் காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். மகாவிஷ்ணு எங்குச் சென்றாலும் கருடனின் மீது அமர்ந்து ஏறிச் செல்வார். ஆனால் பிரகலாதனை உடனே காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் தூணில் தோன்றினார். இதனால் வைகுண்டத்தில் இருந்த கருடனுக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறி "தட்சிண பினாகினி' எனப் போற்றப்படும் புனித நதியான தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்த பாறையின் மீது உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் இருந்தார். இவரது கடும் தவத்தினால் வைகுண்டம் முதல் திருக்கைலாயம் வரை வெப்பத்தினால் தகித்தது. தேவர்கள் முதலானோர் மகாவிஷ்ணுவிடம் சென்று கருடனைக் காப்பாற்றும்படி வேண்டினர். இவர்களது வேண்டுதலின் படியும், கருடனின் விருப்பப்படியும் மகாவிஷ்ணு கருட பகவானுக்குக் காட்சி தந்து உனக்கு என்ன வேண்டும் என்று வினவினார், கருட பகவான் அவரிடம் “குழந்தை பிரகலாதனுக்காகத் தூணில் இருந்து நரசிம்மராக வந்து காப்பாற்றினீர்கள் அதே நரசிம்ம தரிசனம் எனக்கும் காட்டியருளி, இப்பூவுல மக்களையும் காக்க வேண்டும்.” என வேண்டினார். அதனால் மகாவிஷ்ணு இத்தலத்தில் நரசிம்மராகக் காட்சி தந்து அருளினார். மகாலட்சுமியும் நரசிம்மரின் மடியில் அமர்ந்ததால் இங்கு மூலவர் லட்சுமி நரசிம்மராக அருள்பாலிக்கின்றார்.
ஸ்தல அமைப்பு:
அந்திலி லட்சுமி நரசிம்மர் கோயில் அரசமரத்தடியில் சிறகுகளை விரித்துப் பறக்கத் தயாராக உள்ள கருட வடிவிலான சிறிய பாறையின் மீது அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வெளியே திறந்த வெளியில் துவஜஸ்தம்பம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் செல்ல பதின்மூன்று படிகள் உள்ளன.
கோயிலின் உட்புறம் கருவறையும் மண்டபமும் உள்ளன. கருவறையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அருளுகின்றார். பின்புறம் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது ஆஞ்சநேயர் கோயிலும் அமைந்துள்ளது.
ஸ்தல விருட்சம் : அரசமரம்
ஸ்தல சிறப்புகள் :
மூலவர் லட்சுமி நரசிம்மரின் மீது சூரியனின் ஒளி கதிர்கள் வருடம் முழுவதும் துல்லியமாகப் படுவதென்பது அந்திலி லட்சுமி நரசிம்மர் கோயிலின் சிறப்பம்சமாகும்.
முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் பரந்தாமனைக் கண்டு கொண்ட ஸ்தலம். இத்தலத்தின் சிறப்பை கேள்விப்பட்ட மத்வ சித்தாந்த மகான் "ஸ்ரீவியாசராஜர்' அந்திலிக்கு விஜயம் செய்தார். இவர் தனது மறுபிறவியில் ராகவேந்திரராக அவதரித்தவர். பல மகான்கள் வந்து தரிசனம் செய்த இக்கோயில் கருட வடிவில் அமைந்த பாறையின் மீது அமைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். சில காலம் இத்தலத்திலேயே தங்கி, இக்கோயிலின் பின் புறத்தில் ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார்.
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு அந்திலி ஆச்சாரியார் என்பவர் இத்தல நரசிம்மரைப் பூஜித்து வந்தார். அவரின் நினைவாக அவரது உருவச் சிலை இத்தல தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்:
சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இதைத்தவிர மாத சுவாதி நட்சத்திரம், மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
தீராத கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கண் நோய், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் உள்ள நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் லட்சுமி நரசிம்மருக்குத் திருமஞ்சனம், நரசிம்மர் ஹோமம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 7.00 மணி முதல் 10.00 வரை, மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர தினத்தில் காலை 7.00 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
அந்திலி விழுப்புரத்திற்கு மேற்கே 35 கிமீ தொலைவிலும், அரகண்டநல்லூர்/ திருக்கோவிலூர் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 1 கிமீ தொலைவிலும் உள்ளது (விழுப்புரம்-முகையூர்-திருக்கோவிலூர் வழித்தடம்) விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் இடையே அரை மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் (திருக்கோவிலூருக்கு 2 கிமீ முன்) இறங்கி ஒரு கிமீ நடந்து அல்லது ஆட்டோவில் செல்லலாம்.
பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் அந்திலி ஶ்ரீ லட்சுமி நரசிம்மரைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/d79SZ10v_io
https://youtu.be/sN45zwaqF-k?si=IP6E77LX8MxeNwsA
Leave a comment
Upload