82 வயது கிட்டம்மாள்.
தனது மகள் வீட்டுக்கு செல்லும்போது, தனது 2 பேரன்களும் கடுமையான உடற்பயிற்சி செய்வதை பார்த்து 82 வயது கிட்டம்மாளுக்கும் ‘ஆசை’ ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் தனது 2 பேரன்களுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள ஆசைப்பட்டு ‘ஜிம்’முக்கு சென்றிருக்கிறார் கிட்டம்மாள். அங்கு கிட்டம்மாள் 25 நாட்களுக்கு பளு தூக்கும் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.
கோவையில் ‘இந்திய உடற்பயிற்சி கூட்டமைப்பு’ சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு கிட்டம்மாளை பயிற்சியாளர் சதீஷ் அழைத்து சென்றுள்ளார். அங்கு பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில், 82 வயது ‘வீராங்கனை’யான கிட்டம்மாள் முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடையை அனாயசமாகத் தூக்கி, 5-ம் இடத்தைப் பிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ‘தென்னிந்தியாவின் மிக வலிமையான பெண்-2024’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
கிட்டம்மாள் கூறுகையில், ‘‘எனக்கு எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். எனது ஆர்வத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எனது இயற்கை உணவுமுறையே காரணம். எனது 2 பேரன்கள் மற்றும் பயிற்சியாளர் சதீஷின் துணையோடு தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று 5-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளேன். நான் எப்போதும் கம்பங்கூழ், காய்கறி சூப், பேரிச்சம் பழம், முந்திரி போன்ற உணவுகளை எடுத்து கொள்வதால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன்!’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
Leave a comment
Upload