தொடர்கள்
ஆன்மீகம்
மூவரும் அருளும் தாணுமாலயன் கோயில் ! மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

2024023006002860.jpeg

சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரின் அருளும் நமக்கு ஒரே இடத்தில்கிடைப்பதென்பது மிகவும் அரியது.ஆனால் அந்த வாய்ப்பினை நமக்கு அருளும் இடம்தமிழ்நாட்டில் உள்ளது. அவ்விடம் கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ள தாணுமாலயன் கோயில் ஆகும்.. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுளரும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் ’தாணுமாலயன் கோயில்’ என்றழைக்கப்படுகிறது.

இத்திருத்தலம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுசீந்திரம் . இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி.

அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் புகழ் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள்.

தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளதாக இத்தலத்தின் வரலாறு கூறுகிறது.

அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் ’தாணுமாலயன்’ என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி ’தாணுமாலயன்’ என அழைக்கப்படுகிறார்.

அகலிகையால் தேவேந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது அந்த சாபம் நீங்க, தேவேந்திரன் மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.

இக்கோயிலில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது.இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்,இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்,திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம், வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம், பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை ஆகியன ஆகும்.

இத்திருக்கோயிலில் சித்திரை தெப்பத்திருவிழா,ஆவணி பெருநாள் திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா,மாசி திருக்கல்யாண திருவிழா ஆகிய திருவிழாக்கள்சிறப்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்றன.

மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 1929ஆம் ஆண்டில் 18 அடி உயரமுடைய இச்சிலை இராமபிரானின் கருவறைக்கு எதிரில் நிறுவப்பட்டது. சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான மும்மூர்த்திகள் குடிகொண்டிருந்தாலும் சுசீந்திரத்தின் நாயகனாக ஆஞ்சநேயர் போற்றப்படுகிறார். சுமார் 18 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் இவருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது விசேஷமானது எனக் கூறப்படுகிறது.அனுமன் ஜயந்தி நன்னாளில், சுசீந்திரம் அனுமனை மனதார வழிபட்டு, நம்முடைய பிரார்த்தனைகளை அவரிடம் சமர்ப்பித்தால், சகல காரியங்களையும் அவர் ஈடேற்றிக் கொடுப்பார்.

இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.இத்திருக்கோயில் நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில், நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.