தொடர்கள்
ஆன்மீகம்
சூரியனார் வழிபடும் ஸ்தலங்கள் : மதுரை முக்தீஸ்வரர் - பரணீதரன்/பால்கி


20230328202411388.jpg

மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மரகதவல்லி அம்பாள் சமேத அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவிலில் வருடத்திற்கு இரண்டு முறை சூரிய பகவான் லிங்க திருமேனியை வணங்கி செல்வார்.

20230328202556726.jpg

மாசி மாதம் 12 நாட்களும் ஆவணி மாதம் 12 நாட்களும் ஆக மொத்தம் வருடத்திற்கு 24 நாட்கள் சூரிய பூஜை நடைபெறும்.

இதன் ஐதீகம் யாதெனில் திருமலை நாயக்கர் மதுரையை ஆட்சி செய்வதற்கு முன்பு வருடம் தோறும் மாசி மாதம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மாசியில் கொடியேற்றத்துடன் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெற்று வந்தது. அதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்காக வருடம் தோறும் மாசி மாதம் 12 நாட்கள் சூரிய பகவான் கோவிலில் தொழுவார்.

20230328202629435.jpg

அதேபோல் ஆவணி மாதம் சுந்தரேஸ்வரர் ஆகிய சிவபெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் ஆவணியில் இருந்து சுந்தரேஸ்வரர் உடைய ஆட்சி மதுரையில் நடைபெறும் அவர் சுந்தர பாண்டியன் என்ற திருநாமத்துடன் மதுரைம்பதியை ஆள்வார். அப்போதும் மதுரையில் திருவிழா நடைபெறும். அதிலும் ஆவணி மூல திருவிழா சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடலுடன் 10 நாட்களுக்கு மேல் நடைபெறும். அதை நினைவில் வைத்துக் கொள்வதற்காக தான் ஆவணி மாதம் 12 நாட்கள் சூரிய பகவான் இறைவனை தொழுவார்.

20230328202736718.jpg

ஒரு நாளைக்கு இரண்டு தடவை காலை - காலசந்தி பூஜை நேரத்தில் வழிபடுவார். தன்னுடைய தேஜஸ்சை மூன்று ஒளி கதிர்களாக சுருக்கி சிவபெருமானை வணங்குகிறார்.

20230328203113812.jpg

மதுரையிலுள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகும். சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் பல ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

2023032820334482.jpg

ஸ்தல வரலாறு: சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவில். இறைவன் ஆடிய விளையாட்டைப் பார்ப்போமா? இத்திருவிளையாடலின் முக்கிய கதாநாயகன் ஐராவதம் என்ற யானை. இந்த யானை எப்படி இங்கு வந்தது, எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது என்பதை விவரிக்கிறது, அய்யனின் திருவிளையாடல். நிகழ்ச்சிக்கு நாம் புராண காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். ஐராவதம் என்ற வெள்ளை யானை, தேவலோகத்தின் யானை. இது இந்திரனின் வாகனம் ஆகும்.துர்வாச முனிவர் ஒருநாள் இந்திரனைக் காண தேவலோகத்துக்கு வந்தார். சிவ பூஜை முடித்து விட்டு பிரசாதமாக மலர் மாலையைக் கொண்டு வந்து தேவேந்திரனிடம் கொடுத்தார். சிவ பிரசாதத்தின் மகிமையையோ, முனிவரின் தவ வலிமையையோ அறியாத ஐராவதம், அகங்காரம் அதன் அறிவை மறைக்க, மலர் மாலையைத் தும்பிக்கையால் இழுத்து, தன் காலடியில் போட்டு மிதித்தது.

இதனால் ஐராவதம் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது. சாபம் பெற்ற யானை பல நூறாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்து கொண்டிருந்தது. சிவனுக்கு பூஜை செய்வதினால் சாப விமோசனம் பெற்றது. சாப விமோசனம் பெற்ற தன் வாகனத்தை அழைத்து செல்வதற்காக இந்திரன் வருகிறார். தேவலோகம் செல்லும் முன் மீண்டும் சிவ பூஜை செய்ய வேண்டும் என்று ஐராவதம் விரும்புகிறது எனவே தன் பெயரிலேயே மதுரையின் கிழக்கே ஒரு பகுதியை உருவாக்கி முக்தீஸ்வரரை பூஜித்து பின் இந்திரனுடன் தேவலோகம் செல்கிறது.

முக்தி தரும் சிவன் பூமியில் பிறக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் முக்தியைக் கொடுக்கும் ஸ்தலம் மதுரையம்பதி அல்லவா! இதனை "ஜீவன் முக்திபுரம்" என்று ஹாலாஸ்ய புராணம் வர்ணிக்கிறது. ஐராவதம் போன்று, இம் மதுரையிலே நாரைக்கும் கூட முக்தி கிட்டியது. ஆறறிவு மக்களுடன் ஐந்தறிவு விலங்கு இனங்களுக்கும் இறைவன் முக்தி அளிப்பதனால், மதுரையம்பதி "ஜீவன் முக்தி புரம்" என அழைக்கப்படுகிறது. இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐராவதம் வழிபட்ட முக்தீஸ்வரர் ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு, சுமார் 400ஆண்டுகளுக்கு முன், முத்து வீரப்ப நாயக்கர் என்பவரால் ஓர் ஏக்கர் பரப்பளவில் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டது. முக்தி விளக்கு ஆதியில், இங்குள்ள சிவனார், முத்து வீரப்ப நாயக்கரின் பெயரால் முத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இவரை இந்திரேஸ்வரர் என்றும், ஐராவதேஸ்வரர் என்றும் அழைத்துவந்தனர். காலப்போக்கில், இங்கு வாழும் மக்கள், சிவபதம் அடைந்தவர்களுக்காக இந்தச் சிவ சந்நிதியில் "முக்தி விளக்கு" ஏற்றலாயினர். இக்காரணத்தினால் தற்பொழுது "முக்தீஸ்வரர்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஆலயத்தின் சிறப்புகள்: இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது. இந் நிகழ்ச்சி தினமும் இருபது நிமிடம் வரை நீடிக்கிறது. அர்த்த மண்டபத்திற்கு மேல் ஏகாபத்ரிமூர்த்தி என்ற சுதை சிற்பம் உள்ளது. ஏகாபத்ரிமூர்த்தி என்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒரு சேர ஒரே பாதத்தில் நிற்பதாகும். நவகிரக தோஷம் நீங்கும் சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம். ஆலயத்தின் மூலவரான முக்தீஸ்வரரை வணங்குவதின் மூலம் நவக்கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். விநாயகர் மகிமை இத்திருத் தலத்தில் வடகிழக்கிலும் வடமேற்கிலும் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். வில்வம்,நெல்லி, கிளுவை,மாவிலங்கை எனப்படும் நான்கு வகையான மரங்கள் இங்கு இருக்கின்றன.

கோயிலின் அமைவிடம்: மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் கோயிலின் அருகில் அமைந்துள்ளது.

ஊர்: மதுரை.

புராணப் பெயர்: ஆலவாய் அகந்தை கொண்டு சாபம் பெற்ற ஐராவதம் என்ற யானை ஐந்தறிவுடன் இருந்தும் இவ்விடம் வந்து ஈசனை வழிபட்டு, தன் வினையைப் போக்கிக் கொண்டது என்றால் ஆறறிவுள்ள நாமும் அந்த யானையைப் போல் முக்தீஸ்வரரை வழிபட்டு மனத்தில் உள்ள அழுக்குகளை நீக்கியருள வேண்டி மனச் சாந்தியைப் பெறலாமே.