பொறியாளர். வாசுதேவன் அலுவலகம் கிளம்பி வாசலில் நின்று ராதிகாவை அழைத்தார். நான் போயிட்டு வருகிறேன்., மாலை கொஞ்சம் லேட்டாகும் எனக்காக காத்திருக்க வேண்டாம், அப்பா அம்மாவைச் சாப்பிட வைத்திடு என்று கூறிவிட்டுச் சென்றான். அப்பா, அம்மா மீது அளவு கடந்த அக்கறை மற்றும் பாசம், மனைவியே பொறாமைப்படும் அளவுக்கு.
சரிங்க நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாமல் போயிட்டு வாங்க என்று வழியனுப்பினாள். இல்லத்தரசி ராதிகவிற்கு அம்மா மட்டுந்தான் அவர் தனது சொந்த ஊரில் வசிக்கிறார். மணமாகி சென்னை வந்து ஆறுவருடமாகிறது. நான்கு வயது மகன் ஆகாஷ் மற்றும் வாசுதேவின் அம்மா மற்றும் ஓய்வுப்பெற்ற வங்கி அதிகாரியான அப்பா என அளவான கூட்டுக் குடும்பம்.
ஆகாஷிற்கு சிற்றூண்டி ஊட்டிவிட முயல, அவன் மறுத்து அடம் பிடித்து அவளைக் கையில் கடித்தான், முடியை பிடித்து இழுத்துவிட்டு சிரித்தான்.கையில் அவனின் பற்கள் பதிந்த வலியை விட அவனின் நிலைக் கண்ட வலியால் வருத்தமுற்றாள்.
இதைக் கண்ட வாசுவின் அம்மா, ராதிகா ! பிரசவக் காலத்துலே நீ என்ன மருந்தை உங்க வீட்டில் சாப்பிட்டியோ அதான் இப்படி ஒரு குறையோட பிறந்திருக்கான், ஏன் கஷ்டப்படற, பேசாம இவனை ஒரு சிறப்பு பள்ளியுடன் கூடிய காப்பகத்தில் சேர்த்திடலாம் அவர்கள் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லி முடிக்கு முன்னே,
ஏன் உங்களை வேண்டுமானால் காப்பகத்தில் சேர்க்கச் சொல்லவா ? என்று பதிலுக்கு கேட்டதுதான் தாமதம்,
காதில் விழுந்தவுடன் அத்தை ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மாமாவிடம் நிச்சயம் சொல்வாள்.
நாமும் வார்த்தையாலும் வலியினாலும் அவசரப்பட்டுட்டோமே என மருமகளாய் சங்கடப்பட்டாள்
இவர்கள் மட்டும் தங்கள் மகனோடு இருக்கனுமாம், நான் மட்டும் என் பிள்ளையை காப்பகத்தில் சேர்க்கனுமா ? என வாதிட்டது மனத்தினுள் தாய்மனம்.
நேற்று சிறப்பு மருத்துவரிடம் காண்பிக்கச் சென்ற போது, ஆட்டிசம்(Autism) என்பது நேயல்ல கற்றல் குறைபாடுதான். ஆட்டிச பாதிப்பிற்கு என்று குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமிலை. அன்பு ஒன்றே மருந்து. ஆனால் அதை நீங்கள் மனது முழுவதுமாக ஏற்றுக்கொண்டு குழந்தையுடன் அன்போடு நெருங்கிப் பழகும் போதுதான் உங்களை நெருங்கி வருவார்கள். பிறகு பயிற்சியின் மூலமாக இவர்கள் குணமாகி பின்னாளில் அவர்களால் சாதனைகள் கூட படைத்திடமுடியும். நீங்களும் சரியான நேரத்தில் வந்துள்ளீர்கள், என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறியதை நினைத்துப் பார்த்தாள்.
காப்பகத்தில் விடச் சொல்லி அத்தை சொன்னதை ஏற்க முடியாததால்தான் இப்படி பேசும்படி ஆனது என வருந்தினாள்.
அத்தை, மாமா! சாப்பிட வாங்க ! எனக் கூப்பிட்டாள். கதவைத் திறந்து அத்தை வேண்டாம்மா! இன்றைக்கு கார்த்திகை, அதனாலே இரண்டு பேரும் விரதம்! எனச் சொல்லி தாழிட்டாள்.
நல்லா இருந்த குடும்ப வாழ்க்கையில் இப்படி ஒத்தை வார்த்தை சொல்லி கெடுத்துட்டோமே, என வருந்தி, அத்தை! மாமா! என்னை மன்னித்து விடுங்கள். என்னைப் புரிந்துக் கொள்ளுங்கள் என கெஞ்ச, மாமா கதவைத் திறந்து வருத்தம் ஒன்றும் இல்லையம்மா, நீ மற்ற வேலைகளைக் கவனி, வாசு வரட்டும் நல்ல முடிவாய் நாம் சேர்ந்து எடுப்போம்! எனக் கூறி வெளியே புறப்பட்டுச் சென்றார்.
அழுத கண்களுடன் ராதிகா மகனுக்கு வேண்டியதைச் செய்து, மணல் குவித்து அருகில் அமர்ந்து அதில் அவன் கையை மூழ்கச் செய்து பிடித்துக்கொண்டும்,அவனுக்கான படங்கள் வரைந்த அட்டையைக் காண்பித்து அவனுக்கு புரியச்செய்து அன்றைய பொழுது ஒரு வித பயத்துடனும், பதட்டத்துடனே கழிய இரவு வீட்டுக்கு வந்தான் வாசுதேவன்
வாசு, இங்கே வாப்பா ! எங்களுக்கும் வயசாகிட்டு, எங்களால் உங்களுக்கு வேலைப் பளுதானே தவிர ஒரு உதவியும் கிடையாது என்ற மாமா, இதுக்கு மேலே தனியாக காப்பகத்தில் போய் தனித்து இருப்பது எங்களுக்கும் சிரமம். உனக்கும் பெற்றோரை தவிக்க தனியே விட்டு்ட்டான் எனக் கெட்ட பெயர்தான். ஆதனால நாங்க ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்கோம்.
எனக்கு வங்கி பென்ஷன் குறைவில்லாம வருகிறது. அதனாலே நீ தனியா குடித்தனம் போயிடு! என நிறுத்தினார்.
என்னப்பா சொல்றீங்க ? ராதிகா ஏதாவது சொன்னாளா ஏன் இந்த மாதிரி திடீர்னு என குழம்பினான்.
முழுசா கேளுடா! நம்ம ஆகாஷ் பூரணமாக குணமாகனும், அதுக்கு நீங்கள் இருவரும் அவன் பக்கத்திலே இருந்து அவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டும். பல் தேய்ப்பது, குளியல்,சாப்பாடு தூக்கம் என எல்லா அன்றாட பழக்க வழக்கங்களையும் அவனுக்குச் சொல்லித் தந்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நினைத்ததை அலுக்காமல் திரும்பதிரும்ப செய்வதால், குறிப்பாக ஓவியத்திலும், பாடுவதிலும், கல்வியிலும் சாதனைகளை புரிந்திருக்கிறார்கள்.
அதிக நேரம் நீங்கள் இருவரும் ஸ்பெண்ட் செய்து அவனின் திறமையை கண்டறிந்து வளர்க்க வேண்டும் அப்போதுதான் ஆகாஷ் குணமாகி நல்ல கெளரவமான ஒரு நிலைக்கு வருவான். நாங்களும் உன் கூடவே இருந்தா எங்களுக்கும் சேர்த்து ராதிகாவால் அதிகம் உழைக்க வேண்டியதாகவிருக்கும்.
அதனால் நீ கூட உன் வேலையை இரண்டு வருடத்திற்கு விட்டுவிடு, பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். நம்மிடம் இருப்பதே போதுமானது. எல்லா இடத்திற்கும் அவனை அழைத்துப்போய் அன்பாய் அவன் கூட நேரம் செலவழித்து அவனை பூரண நலமாக்கிட வேண்டும். நமக்கு குழந்தையின் வாழ்க்கைதான் முக்கியம் என்றார் முடிவாக.
ராதிகா உன் மேலே எந்த வருத்தத்திலும் இந்த முடிவை உன் மேல் உள்ள கோபத்தில் நாங்கள் எடுக்க வில்லை. ஒரு பிள்ளையின் தேவையை தாயைத் தவிர யார் அறிவார் ? என்றார் அத்தை.
இது ஒரு தாயின் கவலை மட்டும் இல்லை. தாயான உன் கவலையை உணர்ந்த அத்தைக்கும் உன் மீதுதான் கவலை. ஒரு தாயின் கவலை இன்னொரு தாயிக்கே புரியும் என்றார் மாமா.பெற்றோர் பாசத்தை எடை போட யாரால் முடியும்!
Leave a comment
Upload