இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தரைப்படை, விமானப் படை
மற்றும் கடற்படை என முப்படைகளில் கடந்த 2023-ம் ஆண்டு சாதனை
படைத்த 10 வீரப் பெண்களின் சாதனைகளைப் பற்றி நாம் தெரிந்து
கொள்வோமா?
இந்திய கடற்படையின் பெண் கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி:
இந்திய கடற்படையின் புதிய போர் கப்பலுக்கு முதல் பெண்
அதிகாரியாக, பெண் கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி தலைமை
தாங்குகிறார். தற்போது இவர், ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின்
முதல் லெப்டினன்டாக பணியாற்றி வருகிறார்.
இந்திய விமானப் பிரிவின் குரூப் கேப்டன் ஷாலிசா தாமி:
இந்திய விமானப் படையின் முன்னணி போர் பிரிவுக்கு முதல் பெண்
அதிகாரியாக குரூப் கேப்டன் ஷாலிசா தாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர், கடந்த 2019-ம் ஆண்டு விமானப்படை பறக்கும் பிரிவின் முதல்
பெண் விமான தளபதியாக நியமிக்கப்பட்டவர் எனக் குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப் படை விங் கமாண்டர் தீபிகா மிஸ்ரா:
இந்திய விமானப் படையில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி
கேலண்ட்ரி விருது வென்ற முதல் பெண் விங் கமாண்டர் தீபிகா
மிஸ்ரா. மேலும், மத்திய பிரதேசத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட
கடும் மழை வெள்ளத்தில் சிக்கிய 47 மனித உயிர்களை
காப்பாற்றியதற்காக தீபிகா மிஸ்ராவுக்கு கேலண்ட்ரி விருது
வழங்கப்பட்டது எனக் குறிப்பிடத்தக்கது.
இந்திய தரைப்படையின் பெண் கேப்டன் சிவசௌகான்:
இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதியில், உலகின் மிக
உயரமான போர்க்களமாக அறியப்படும் சியாச்சின் மலையுச்சியின்
பாதுகாப்பு பணியில் முதல் பெண் அதிகாரியாக, கடந்த ஜனவரி மாதம்
முதல் பெண் கேப்டன் சிவசௌகான் பணியாற்றி வருகிறார். இவர்,
அவ்வப்போது தனது குழுவினருடன் இணைந்து பல்வேறு தீவிரவாத
செயல்களைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் .
இந்திய ராணுவ அமைச்சகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்
நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், இந்திய பீரங்கிப்
படையின் லெப்டினன்ட்கள் மெஹக் சைனி, சாக்ஷி துபே, அதிதி
யாதவ், பயஸ் முட்கில், அகன்ஷா ஆகிய 5 பெண்களும் தலைசிறந்த
ராணுவ அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய ராணுவ மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவர்
சுனிதா:
இந்திய ராணுவ மருத்துவமனைகளில் புதுடெல்லியில் இயங்கி வரும்
ரத்த மாற்று மையத்துக்கு தலைமை பெண் மருத்துவராக சுனிதா
கடந்த நவம்பர் மாதம் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்திய ராணுவ பொறியாளர் பிரிவின் பெண் அதிகாரி சுர்பி
ஜக்மோலா:
இந்திய ராணுவத்தின் 117-வது பொறியாளர் படைப்பிரிவைச் சேர்ந்த
பெண் கேப்டன் சுர்பி ஜக்மோலா, பூடான் நாட்டு எல்லை சாலைகள்
அமைப்பின் திட்டமான டண்டக்கில் தலைமை அதிகாரியாக
நியமிக்கப்பட்டார். எல்லை சாலைகள் அமைப்பில், வெளிநாட்டுப்
பணியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி சுக்பி
ஜக்மோலா.
மிசோரம் மாநில ஆளுநரின் ஏடிசியாக பெண் ஸ்க்வாட்ரான் லீடர்
மனிஷா பதி:
மிசோரம் மாநில ஆளுநரின் உதவியாளர்-டி-கேம்பாக (ADC), தற்போது
பெண் ஸ்க்வாட்ரான் லீடர் மனிஷா பதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதன்மூலம் ஒரு மாநில ஆளுநரின் ஏடிசியாக (உதவியாளர்-டி-கேம்ப்)
நியமிக்கப்பட்ட இந்தியாவிலேயே முதல் பெண் மனிஷா பதி.
இந்திய ராணுவ தகவல்தொடர்பு தலைமை பெண் அதிகாரி கர்னல்
சுசிதா சேகர்:
இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை மையத்தின் சப்ளை செயின்
பராமரிப்பு மற்றும் தகவல்தொடர்பு மண்டல மெக்கானிக்கல்
டிரான்ஸ்போர்ட் பட்டாலியன் தலைமை பொறுப்புக்கு முதல் பெண்
ராணுவ அதிகாரியான கர்னல் சுசிதா சேகர் நியமிக்கப்பட்டு
பணியாற்றி வருகிறார்.
இந்திய ராணுவ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் படைப்
பிரிவின் பெண் தலைமை அதிகாரி கர்னல் கீதா ராணா:
இந்திய ராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்
மெக்கானிக்கல் இன்ஜினியர் பிரிவின் பெண் கர்னல் கீதா ராணா,
கிழக்கு லடாக்கில் ஒரு சுயாதீன களப் பட்டறையின் தலைமைப்
பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறார்.
Leave a comment
Upload