கனியின் சுவையைப் பருகின!
அன்பே!
எழுத நினைக்கும் எண்ணங்களை எல்லாம் எனக்குள்ளிருந்து ஒன்றுதிரட்டி ஏகாந்தமாய் மடல் படைக்க வைப்பவளே!
இன்று நீ செய்யும் மாயம் காண என்னிதயம் தாளாக விரிந்துகிடக்கிறது!
அன்பின் வடிவம்தான் - ஆனாலும் புதுமையாய் என்ன சொல்லலாம் என்று எண்ணியபோது எடுத்துச் சொல்லெலாம் என்று சொல் எல்லாம் வந்து காத்துக்கிடப்பதைப் பார்!
வரி வரியாக நீ வர்ணிக்கப்படுவதும் உன்வசம் நான் என்னைத் தருவதும் இன்று நேற்றா தொடர்கிறது?
நம் உறவின் சுகங்களை ஒவ்வொரு நொடியும் உணரும் ஆனந்தமிருக்கிறதே - அதை அப்படியே எழுதிக்காட்ட பாவம் வரிகளுக்கும்.. வார்த்தைகளுக்கும் வலிமையில்லை!
என்றாலும் முயற்சிகள் முழுமையாகத் தொடர்கிறேன்!
காலையில் பூபாளம் முதல் மாலையில் மோகனமென ஒவ்வொரு வேளையிலும் உன்னுடன் ராகங்களில் சஞ்சரிக்கிறேன்!
தேவதையாய் நீ என் வாழ்வில் வந்துவிட்டபின் என் தேவைகளும் வேறெதுவும் கிடையாதே!
அகவாழ்வின் சுகமெல்லாம் உன் அன்பால் எழுதப்படும் சுயசரிதம் எனும்போது இதைவிட இன்பங்களேது?
யுகம் யுகமான தேடலின் எல்லையிது என்று நம் இரண்டு இதயங்களும் சந்தித்த புள்ளி தெய்வத்தின் சன்னதியாகவே எனக்குத் தெரிகிறது!
மனமும் நினைவும் ஒருமிக்க நீயும் நானும் ஒன்றிணைந்த கோலமிருக்கிறதே - அது சொர்க்க வாசல்!
பிறவியின் பயன் இதுவென்று ஒருமனதாய் உறுதியேற்றோமே அது காதலின் உச்சம்!
பிரிவென்பதை இருவரும் கனவிலும் நினையோம் என்று சபதமெடுத்தோமே - அது உள்ளங்களின் பிரகடனம்!
வார்த்தைகள் வரம்பெற்று வந்து விழுவதென்பது வாசகத்திற்காக அல்ல!
வளமான எண்ணங்களின் ஊர்வலம்! உணர்வுகளின் படையெடுப்பு!
உற்சாகம் ஊற்றெடுக்கும் போதெல்லாம் உன் நினைவுதானே காரணம்!
ஓரவிழியால் நீ பார்த்த பார்வை என் நினைவுப்படலத்தில் தெரியும் போதெல்லாம் பித்துப் பிடித்தவன் போல் நான் மாறுகிறேன்!
கட்டுக்கடங்காத ஆசைகளை மனக்கட்டுப்பாட்டுடன் அடக்கி ஆள்வதென்றும் அத்தனை சாத்தியமானதல்ல!
அதுவும் உன் அழகு உலா வரும் பொழுதுகளில் நான் அடைக்கலமாவதைத் தவிர!
மெளனத்தில் தலைகவிழும் பூவே! உன்னை வாரியணைக்க வருகிறேன்!
நீலநயனங்களில் நீயும் ஒரு நித்திலக் கவியெழுது!
பாவையிடம் நான்கேட்கும் பார்வை வரம் பெற்றுவிட்டால் பகலிரவு சொர்க்கமாகும்!
மோகனமே மூச்சாகும்! முத்தச் சத்தம் கவிபாடும்!
பருவ நிலா அருகில் வரும்! பக்கம்வந்து தோளில் விழும்! கர்வமிலா தேவ தேவி கனிந்துருகும் நேரம் வரும்!
அசையும் விரல்கள் அங்கம் கிள்ளும்! இசையோ என்றே உந்தன் குரல் அங்கு எழும்! பசியோ உறக்கமோ அகன்று நின்றிடும்!
ஒருவர்மீது ஒருவர் சாய.. உய்யலாலா பாடத் தோன்றும்! நாமிருவர் தனித்திருக்க.. நாவாய் (படகு) நகர்ந்து செல்லும்!
தென்றல் காற்றில் மிதந்துவரும் தேனிசைப் பாடல் காதில் மோதும்! பொல்லா ஆசை பொங்கிப் பாய்ந்திட புதிய வழிகள் நாம் கண்டிட வேண்டும்!
வெள்ளிநிலவைசாட்சி வைத்தே முல்லை மலரை நுகர்ந்திட வேண்டும்!
இடைவெளியில்லாமல் இரவுப் பொய்கையிலே இளமை நாதம் தொடர்ந்திட வேண்டும்!
இதழ்களின் ஒலியைத் தவிர இங்கே எதுவும் வேண்டாம் என்பதால் கவிதை சொல்லும் உதடுகள் - கனியின் சுவையைப் பருகின!!
Leave a comment
Upload