தமிழக அரசு பொறுப்பேற்று நான்கு வருடங்களாகிவிட்டன. இந்த அரசு அதிகம் கவனம் செலுத்தியது இரண்டு துறைகளில் தான். ஒன்று டாஸ்மாக் மற்றொன்று அறநிலையத்துறை.
மற்ற துறைகளில் எல்லாம் அரசு கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. முக்கியமாக முதல்வர் பொறுப்பு வகிக்கும் காவல்துறை. நாளுக்கு நாள் மக்களுக்கு பயம் குறைந்துகொண்டே போகிறது.
அதனால் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக போதை கலாச்சாரம், பெண்கள் மீதான அத்துமீறல்கள், பெண்குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பட்ட பகலில் நடக்கும் வழிபறிகள் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதிக கவனம் செலுத்த வேண்டிய சுகாதாரத்துறையிலும் கவனம் இல்லை. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படாமல் உயிர்கள் போகின்றன. இதை கேட்ட நடிகர் கஞ்சா கருப்புவை மிரட்டும் தொனியில் பதில் அளிக்கிறார் அமைச்சர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. நிதித்துறை பற்றி சொல்லவே வேண்டாம்.
கடனில் தத்தளிகிறது தமிழகம். தமிழகத்தின் மற்ற துறைகளின் நிலை இப்படி இருக்கும்போது அறநிலையத்துறை முழு வீச்சில் இயங்குவது போல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது தமிழக அரசு.
அறநிலையத்துறை அமைச்சரும், முதல்வரும் ஆயிரக்கணக்கில் குடமுழுக்கு செய்ததை மிக பெருமையாக பறை சாற்றுகிறார்கள். ஆனால் நாள் தோறும் பல அவலங்கள் அறநிலையத்துறையில் அரங்கேறுகிறது. உண்மையிலேயே அவர்கள் துறை மீதும் மக்கள் மீதும் அக்கரையில் செயல்படுகிறார்களா அல்லது அறநிலையத்துறையில் உள்ள வளங்களின் மீதான அக்கறையா என்று கேட்க தோன்றுகிறது.நல் எண்ணத்தில் நலத்திட்ட பணிகள் நடந்தால் மகிழ்ச்சியே.
இந்த நான்கு ஆண்டுகளில் இடிக்கப்பட்ட ஹிந்து கோயில்கள் அதிகம். வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியவில்லை, முருகன் கோயிலில் தைப்பூசத்திற்கு மக்கள் சரியான ஏற்பாடுகள் இல்லாமல் அவதி படுகிறார்கள்.
வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்க அரசு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கி அதனை நிறைவேற்ற முயலும் அதே வேலையில் சென்னையில் சுமார் 33 வருடங்கள் வள்ளலார் வாழ்ந்த இடத்தை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இது திமுக அரசு அக்கரையில் இல்லாமல் அரசியலுக்காகவே அறநிலையத்துறையை பயன்படுத்துகிறதோ என்று என்ன தோன்றுகிறது.
சென்னையில் தான் தங்கியிருந்த காலத்தில் தான் அவர் திருவருட்பாவின் ஐந்து பாகங்களை பாடியுள்ளார். சென்னையை பற்றியும் பாடியுள்ளார்.
சென்னையில் ஏழு கிணறு வீராச்சாமி தெருவில் இருக்கும் இல்லத்தை அரசுடைமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தவறிவிட்டது தமிழக அரசு. இது குறித்து அந்த தெருவை சேர்ந்தவர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அனைத்து முயற்சிகள் எடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வியப்பாக உள்ளது.
அந்த தெருவை சேர்ந்தவர்கள் ஒரு குழு அமைத்து தற்போது அன்னதானம் அளித்து தங்களால் ஆன சேவைகளை செய்து வருகின்றனர். இருந்தாலும் அரசாங்கம் அதனை கையிலெடுத்தால் மேலும் இது சென்னையில் வள்ளலாரின் ஒரு மிகச்சிறந்த நினைவிடமாக அமையும்.
தெய்வங்களை ஏற்கும் பகுத்தறிவு பகலவன்கள் மற்றும் வள்ளலாரை எங்க ஆளு என்று சொந்தம் கொண்டாடும் அரசியல்வாதிகள் இந்தப் பாடலைப் படித்துவிட்டால் வள்ளலாரைப் பாராட்டுவார்களா?
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அந்த மகான் இவர்களையும் ஆசீர்வதிப்பார். அது தான் சனாதனம்!
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!
வள்ளலாரை போற்றுவோம் அவர் வழி நடப்போம் என்றிருக்கும் சன்மார்க்க நண்பர்கள் ஏராளம். அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் 100 கோடியில் பன்னாட்டு மையம் அமைப்பதால் என்ன பயன்.
அரசியலுக்காக இல்லாமல் அக்கறையுடன் அறநிலையத்துறை செயல்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
தட்டில் போடும் காசையும் உண்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பு, இந்துக்கள் கோவிலுக்கு சாதி அடையாளங்களுடன் செல்ல தடை என அக்கப்போர்களில் ஈடுபடாமல் மக்களின் உணர்வுகளில் உபத்திரவம் செய்யாமல், அறநிலையத்துறையில் பெருகிக்கிடக்கும் செல்வங்களை காத்து நேர்மையான அக்கறையுடன் செயல்படுமா? அறநிலையத்துறை
Leave a comment
Upload