தொடர்கள்
பொது
பிச்சை நன்றே பிச்சை நன்றே !!

இந்தியாவில் வசிக்கும் உலகின் மிகப்பெரிய பணக்கார பிச்சைக்காரர்கள்!

20230614180208240.jpg

உலகின் மிகப்பெரிய பணக்கார பிச்சைக்காரர், இந்தியாவின் பிரமாண்ட பல்தொழில் வர்த்தகத்தின் முக்கிய கேந்திரமாக - மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் வசிக்கிறார். அவரது சொத்து மதிப்பு மட்டுமே ₹7.5 கோடி! இன்றும் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஆசாத் மைதானம் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?

பரத் ஜெயின் காலையில் 2 மணி நேரம் மட்டுமே பிச்சை எடுத்து நாள்தோறும் ₹2 ஆயிரம் முதல் ₹3 ஆயிரம் வரை 'கல்லா' கட்டுகிறார். குடும்ப வறுமை காரணமாக பிச்சை எடுக்க ஆரம்பித்த பரத் ஜெயின், தற்போது தனது 2 குழந்தைகளையும் உயர்தர கான்வென்டில் படிக்க வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல… மும்பையில் மிகவும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு பன்னடுக்கு மாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் பரத் ஜெயின் குடியிருக்கிறார்.

இதுதவிர, அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் பரத் ஜெயினுக்கு 2 வீடுகள் உள்ளன. இதன் ஒரு ஃபிளாட்டின் மதிப்பு ₹70 லட்சம். மேலும், மும்பைக்கு அருகே தானே பகுதியில், 2 கடைகளை பரத் ஜெயின் விலைக்கு வாங்கி, அவற்றை தலா ₹30 ஆயிரம் என மாத வாடகைக்கு விட்டிருக்கிறார். தற்போது மும்பையில் பரத் ஜெயினுக்கு ₹7.5 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன.

பரத் ஜெயின் தனியாள் இல்லை. அவரைப் போலவே இன்னும் பலர்....

மும்பையின் அந்தேரி பகுதியில் பிரபல கோலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் டிவி சீரியல்கள் நடிகர்-நடிகைகள் வந்து செல்லும் உயர்தர உணவகத்தின் வாசலில் மலாயா என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு நாள்தோறும் ₹1500 வரை வருமானம் கிடைக்கிறது. இப்பணத்தில் அந்தேரி மேற்கில் ஒரு சிங்கின் பெட்ரூம் ஃபிளாட், அந்தேரி கிழக்கில் ஒரு ஃபிளாட்டை வாடகைக்கு விட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

இதுதவிர, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அசோக் திரையரங்கின் பின்புறம் வசிக்கும் பிச்சைக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர் சரஸ்வதியா தேவி. இவர் மாதமொன்றுக்கு பிச்சை எடுப்பதன் மூலம் ₹50 ஆயிரம் வரை சம்பாதித்து, அதில் ₹36 ஆயிரம் வரை இன்ஷுரன்ஸ் பிரிமியம் கட்டி வருகிறார்.

இதேபோல் சோலாப்பூரில் சாம்பாஜி காலே என்பவர் தொழில்முறை பிச்சைக்காரரான உருமாறி சம்பாதித்து, அதே பகுதியில் வசிக்க ஒரு ஃபிளாட் மற்றும் ஒரு கிரவுண்ட் காலி நிலம் மற்றும் 2 தனிப்பட்ட வீடுகள் வைத்துள்ளார். இதன் மதிப்பு பல லட்சம்! இதுதவிர, தனியே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார் சாம்பாஜி காலே. இதன்மூலம் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து வருகிறார்.

பிர்ஜு சந்திர ஆசாத் என்ற பிச்சைக்காரர் சமீபத்தில் இறந்தபோது, அவரது உடைமைகளை போலீசார் சோதனை நடத்தினர். அதில், ₹8.77 லட்சம் மதிப்புள்ள பிக்சட் டெபாசிட் சான்றிதழ் மற்றும் ₹1.50 லட்சம் ரொக்கப் பணம் இருப்பதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மும்பையில் பிச்சை எடுக்கும் பாப்புகுமார் என்ற மாற்றுத் திறனாளி இளைஞர் நாளொன்றுக்கு ₹2 ஆயிரம் வருவாயுடன் ₹1.25 கோடி சொத்து வைத்துள்ளார். இதேபோல், லஷ்மிதாஸ் என்ற மூதாட்டி பிச்சை எடுப்பதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். இவர் ரயில்வே தண்டவாளம் பகுதிகளில் டெண்ட் கொட்டகை கட்டி, வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார். மேலும், மும்பையில் கிருஷ்ணகுமார் கீதை என்பவர் பிச்சை எடுத்து, சொந்தமாக ஒரு ஃபிளாட் வைத்துள்ளார் எனக் குறிப்பிடத்தக்கது.

அடுத்த முறை யாரையாவது "அட பிச்சைக்காரா" என்று திட்டுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும்.

கற்கை நன்றே கற்கை நன்றே..

பிச்சை புகினும் என்ற வரிகளையே மாற்றி விடுகின்றனர்.... இதெற்கெல்லாம் மூலதனம் ???

நமது கருணை மட்டுமே !!!!

-மாலாஸ்ரீ