சீனாவுக்கு அடுத்தபடியாக தொழிற்சாலைகள் உள்ள நாடு சந்தேகமேயில்லாமல் இந்தியா தான்.
ஆனால் சீனாவில் நடக்கும் குவாங்சாவ் தொழில் கண்டாட்சி போல இந்தியாவில் ஏன் இல்லை என்று யோசிப்பவர்களுக்கான முதல் பதில் தான் பாரத்டெக்ஸ். இதே போன்ற ஒரு ஆயத்த ஆடைகளுக்கான ஒரு கண்டாட்சியை சில வருடங்களுக்கு முன் வந்து பார்த்தவர்களுக்கு இந்த வருட கண்காட்சி பிரமிப்பை தந்தது.
பிரதம மந்திரியே இந்த ஆண்டு பாரத் டெக்ஸை அக்கறையோடு பிரத்யேகமாக சிரத்தை எடுத்துக் கொண்டார் என்று சொல்கிறார்கள். உண்மையா தெரியவில்லை. ஆனால் அவர் முதல் நாள் தொழிற்கண்டாட்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
அதற்கான அழைப்பிதழை டெல்லி வந்து சேர்ந்ததும் தான் கொடுத்தார்கள் அமைப்பாளர்கள். முன்னமே கொடுத்திருந்தால் அதை துவக்க விழாவில் கலந்து கொண்டிருக்க முடியும்.
நூலிலிருந்து, ஆயத்த ஆடை வரைக்குமான ஏராளமான வியாபாரிகள் தங்கள் கடைவிரித்திருந்தார்கள்.
முதல் ஆண்டு இத்தனை பிரம்மாண்டத்தில் நடப்பதால் பாவம், இன்னமும் அனுபவம் வேண்டும்.
சரியான விளம்பரப் பலகைகள் இல்லை, சரியான முறையில் எது எங்கே இருக்கிறது, உணவு அமைப்பு என்ன என்று சொல்ல ஆளில்லை. இதெல்லாம் முதல் இரண்டு நாட்கள் தான். பின்னர் ஓரளவு சரி செய்யப்பட்டு விட்டது அல்லது வந்திருந்தவர்களுக்கு பழக்கமாகி விட்டது.
சீனாவின் தொழிற்கண்காட்சி பதினைந்து நாட்கள் நடக்கும். அதையே மூன்றாக பிரித்து வெவ்வேறு துறைகளுக்கு நடக்கும்.
பொம்மை தயாரிப்பாளர்கள் முதல், மருந்து தயாரிப்பாளர்கள், கனரக உற்பத்தியாளர்கள், கார் தயாரிப்பாளர்கள், ஆயத்த ஆடை இப்படி அன்றாட வாழ்வில் நாம் பார்க்கக் கூடிய அத்தனை சமாச்சாரங்களும் தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு பதினைந்து நாள் திருவிழா வருடத்தில் இரண்டு முறை குவாங்க்சாவில் நடக்கும்.
இந்த பாரத் டெக்ஸ் அதில் ஐம்பது சதவிகதம் அளவு இல்லையென்றாலும், பிரம்மாண்டமாகத் தான் இருந்தது.
உ.பி, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் சிறந்த முறையில் பங்கேற்றன. தமிழ்நாடும் தன் பங்குக்கு திருப்பூர், கரூர் தயாரிப்பாளர்களை களமிறக்கியிருந்தது.
எல்லா மாநில அரசுகளும், தங்கள் விளம்பரங்களுக்காக் பெரிய பெரிய ஸ்டால் போட்டு அதிகாரிகளை அமர்த்தியிருந்தார்கள்.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோஃல்ப் கார்ட்டில் கண்காட்சியின் மூன்றாவது நாள் உள்ளேயே பரிவாரங்கள் சூழ வந்து விட்டார்.
அவரை நெருங்கத்தான் அதிகாரிகள் விடவில்லை. வீடியோ எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை.
பாரத்டெக்ஸ் ஆயத்த ஆடைகள், துணி, நூல் இப்படி ஆடைகள் சார்ந்த அனைத்துக்குமான ஒரு மிகப் பெரிய இந்திய தொழில்கண்காட்சி.
(பாரத் லவுஞ், வெளிநாட்டு வியாபாரிகளுக்கான உணவுக் கூடம்)
இலவச உணவு, தங்கும் விடுதி, போக்குவரத்து என்று அனைத்து நாடுகளும் ஏற்பாடு செய்வதைப் போலவே இந்தியாவும் இறங்கி விளையாடுகிறது.
எந்த முயற்சியிலுமே அதன் வெற்றி அதன் தொடர்ச்சியைப் பொறுத்துத் தான்.
"பாரத்டெக்ஸ்" அடுத்த எடிஷன் எப்படி இருக்குமோ அதைப் பொறுத்துத் தான் உற்பத்தியாளர்களுக்கு பலன் இருக்கும்.
இந்தியாவின் வணிகப் பாய்ச்சல் துவங்கியிருக்கிறது. விரைவில் ஒரே தொழிற்கண்காட்சியில் அத்தனை துறைகளையும் ஒருங்கிணைத்து மேலும் பிரம்மாண்டமான வர்த்தக கண்காட்சியை நடத்த இந்தியா தயாராகவே இருப்பதாகத் தான் தோன்றுகிறது.
மேலதிக விபரங்களுக்கு அதன் அதிகாரபூர்வ வலைதளத்தில் அனைத்து தகவல்களும் இருக்கின்றன.
Leave a comment
Upload