தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் -- பாகம் 109 -ஆர் . ரங்கராஜ்

6ஆம் - 7ஆம் நூற்றாண்டில் திருவல்லிகேணியைப் பற்றிய பேயாழ்வார் குறிப்புகள்

20231017193640601.jpg

பேயாழ்வார்

முதலாழ்வார் மூவருள் மூன்றாமவராக விளங்குபவர் இவர். இவர் தொண்டைநாட்டில் உள்ள சென்னை நகரின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணிக்குத் தென்திசையிலுள்ள திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர் என நம்புகின்றனர். இவர் உதித்த புனித நாள் ஐப்பசி மாதம் சதய விண்மீன் கூடிய நாள். இவர் திருமால் ஏந்திய வாள் படையின் அமிசமாகப் பிறந்தார் என்பர்.

சித்தாத்திரி ஆண்டு ஐப்பசித் திங்கள், வளர்பிறையில் (சுக்ல பட்சம்) பொருந்திய தசமி திதியில் வியாழக்கிழமையன்று சதய நாளில் எப்பெருமானின் ஐம்படைகளுள் ஒன்றாகிய நாந்தகம் என்னும் வாளின் அமிசம் உடையவராய்ப் பேயாழ்வார் அவதரித்தருளினார்.

6ஆம் - 7ஆம் நூற்றாண்டில் பேயாழ்வார் பிறந்தார் என்பது வரலாற்று ஆசிரியர் திரு கே. எ. நிலங்கண்ட சாஸ்திரியின் கணிப்பு.

20231017193722223.jpg

பெயர்க்காரணம்

இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதரினும் வேறுபட்டவராக இவரைக் காட்டின. தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்தார்; சிரித்தார்; தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கொண்டாடினர்.

பேயாழ்வார் மனம் இளமையிலேயே கல்வியில் சென்று பதிந்தது. எல்லா நூற்பொருள்களும் அவருக்கு இனிது விளங்குவனாயின. அவரது மனம் காந்தத்தில் ஊசி சென்று பொருந்துவதுபோலத் திருமாலின் திருவடித் தாமரைகளில் சென்று பொருந்தி அவற்றிலேயே நிலைத்துவிட்டது. அதனால் அவர் எப்பொழுதும் அருந்தமிழ்ப் பாக்களால் பரமன் புகழினைப் பாடிப் பாடி, அதனால் களிப்பு மிகக்வராய் ஆடி ஆடித் திரிவார். அவரைக் கண்டவர்கள், 'இவர் கருவிலேயே ஞானமாகிய திருவுடையராய் அவதரித்தவர்; மெய்ஞ்ஞானச் செல்வர்'என்று போற்றுவார்கள்;'அவரை வணங்கினால் நாம் மக்கட் பிறப்பை எய்தினால் அடைதற்குரிய பயனை அடைவோம்'என அவருடைய திருவடிகளை வணங்குவார்கள். இவ்விதம் கண்டோர் அனைவரும் வணங்கும் வாய்ப்புடையவராய் விளங்கினார் பேயாழ்வார்.

20231017193751164.jpg

நாலாயிர திவ்யப் பிரபந்ததின் மூன்றாவது திருவந்தாதியில், மாலை நேரத்தில் திருவல்லிக்கேணியில் அழகை பேயாழ்வார் இவ்வாறு வர்ணிக்கிறார்:

"வந்து தைத்த வெண்திரைகள் செம்பவள
வெண்முத்தம் அந்தி விளக்கு மணிவிளக்காம்- எந்தை
ஒரு வள்ளித் தாமரையாள் ஒன்றிய சீர்மார்வன்
திருவல்லிகேணியான் சென்று".

("The white waves of the Bay of Bengal which hit and run the shore bring with them white pearls and red corals which get themselves deposited on the shore and these gems shed lights which illuminate the entire town of Thiruvallikeni in the evenings". The Alvar obviously has in his mind the nearness of Thiruvallikeni to the sea when he sang the verse Thiruvallikeni, which means a sacred lily tank. The sthalapuranam of the temple informs that the place was also known as kairavini, the exact Sanskrit equivalent of Thiru Allikeni.)

20231017193824752.jpg

சிவனும் திருமாலும் ஒருவரே

இவரும் பொய்கையாழ்வார் போலவே சிவனையும், திருமாலையும் ஒருவராகவே காண்கின்றார். அதாவது சங்கர நாராயணனாகக் காண்கின்றார். (பேரா. அ. தட்சிணாமூர்த்தி)

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து (63)

(தொடரும்)