தொடர்கள்
“பெண்கள் நாட்டின் கண்கள்...” - தில்லைக்கரசி சம்பத்.

20190208163548264.jpeg


இது எல்லா ஆண்களையும் குறிப்பிட்டு இல்லை.. (பெண்களை பெண்களாக மதிக்கும் ஆண்கள் நீங்கலாக) மற்ற மோசமான ஆண்களிடம் ஒரு சின்ன நேர்காணல்...

#இந்த வேலைக்குப் போற பெண்கள் பற்றி உங்க கருத்து ??.....................


** படிச்சதுக்கா வேலை கொடுத்திருப்பான்? பொம்பளைய பாத்தானோ, உடனே வேலை கொடுத்திருப்பான்...

#இந்த பத்திரிக்கை டிவி மீடியாவுல வேலை பார்க்கும் பெண்கள்?................


**அதெல்லாம் மோசம்மா.. எல்லாம் படியிர கேஸு.. படியாட்டி ஆளவச்சித் தூக்கிருவோம்ல..

# உங்க கூட வேலை பார்க்கும் பெண்களை யாராவது கேவலப்படுத்தி சொன்னா?...........


**ஆங்... எங்க கூட இருக்குற பொம்பளைகள கேவலப்படுத்த எங்களுக்கு மட்டும் தான் உரிமை.. அப்படி எவனாவது வெளீல இருக்கிறவன் சொன்னா பதிலுக்கு அவன் வேலை பாக்குற இடத்தில இருக்கிற அத்தனை பொம்பளைங்களையும் அசிங்கப்படுத்துவோம்ல..

#உயர் பதவியில இருக்கும் பெண்கள்?.....


**இதெல்லாம் திறமையப் பாத்துக் கொடுத்திருப்பானு நினைக்கிற!! ஹிஹிஹி.... பொம்பளைக்கு எல்லாம் ஏது அவ்வளவு மூளை..!!

#நடிகைகள்?.......


**அதெல்லாம் பொம்பளை லிஸ்டுலேயே கிடையாது.

#பெண் அரசியல்வாதிகள்?...........


**இதெல்லாம் நாங்க சொல்லிதான் தெரியனுமா? எல்லாம் கேவலம் புடிச்சதுங்க...

#வீட்டில இருக்கிற பெண்கள்?..........


**கொடுக்கிற பணத்தை வச்சிக்கிட்டு கட்டுச்செட்டா இருந்து புருஷனுக்கு மூணு வேள சோறாக்கிப்போட்டு புள்ளைங்கள கவனிச்சுகிட்டு கம்முனு இருக்கனும்.. எதாவது எதிர்த்து பேசுனா அவ்வளவுதான்... தொலைச்சுப்புடுவோம்.. ஏதுடா.. புருஷன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறானே.. ஏதோ மன நிம்மதிக்கு அவன் குடிச்சா குடிச்சிட்டு போவட்டும்னு வுடாம சொம்மா நொய்யி நோய்யினு சண்டை வலிச்சிக்கினு மனுசன பாடா படுத்த வேண்டியது.. இரண்டு மூஞ்சு மேல உட்டா அடங்கிடுவாளுங்க.. கோச்சிக்கிட்டா எதாவது வாங்கிக்கொடுத்து சமாதானம் பண்ணிடுவோம்ல..
ஆனா இந்த ஃபேஸ்புக் வாட்ஸப்ப வச்சிக்கிடடு இவளுக பண்ற அநியாயம் இருக்கே! யப்பா! இதுங்க எல்லாம் கள்ள புருசன் தேடுறதுக்குனே இதுல வலை வீசுறாளுங்க.. இதுங்களுக்கு எல்லாம் போன் வாங்கி நெட்சார்ஜ் போட்டுக்கொடுக்கிறான் பாரு புருஷனுக... அவனுகள ஒதைக்கனும்.

#இந்த நடுத்தர வயசு பெண்கள்?......


**ஹ...! (கண்ணடித்து) அதெல்லாம் ஆண்ட்டீஸ்.. நாங்க அப்படிதான் கூப்பிடுவோம்.. இதுங்க தனி ரகம்..

#காலேஜ் போகிற பெண்கள்?......


**அதுங்களா? கண்ட டிரெஸ் போட்டுக்கிட்டு சுத்துவாளுங்க.. எல்லாம் படிக்கிற திமிரு.. ஒருத்தனையும் மதிக்காதுங்க எங்களைப் பிடிக்கலனு சொன்னா மூஞ்சில ஆசிட் ஊத்திருவோம் தெரியுமில்ல... நைட் பத்துமணிக்கு என்னா சினிமா வேண்டிக்கெடக்கு!!! டெல்லில அப்படிதான ஒரு பொண்ணுக்கு பாடம் கத்துக் கொடுத்தாங்க.....

#இந்த ஸ்கூல்ல படிக்கிற டீன்ஏஜ் பொண்ணுங்க?....


**அதுங்கள ஈஸியா மடக்கி போட்டோ வீடியோ எடுத்துறலாம்.. முக்கியமா ஏழை வீட்டு பொண்ணுங்களா இருந்தா வசதி..

#சின்ன பெண் குழந்தைகள் கைக்குழந்தைகள்?.......


**மாட்றதே இதுங்க தானே!!! இதுங்களால ஒரு பிரச்சனை வராது.. ஏன்னா சொல்லத் தெரியாது.. ஆனா சொல்லிடும்னு தெரிஞ்சா கல்லத்தூக்கிப் போட்டு கொன்னுரானுங்க.. இல்லைனா, அவன் மாட்டிக்குவானே...!


#இப்படி வயசு வித்தியாசம் இல்லாம பெண்களை பலாத்காரம் கொலைனு..............


**நிறுத்துமா..!! பொம்பளையாச்சே.. போனாபோகுதுனு பதில் சொன்னா.. என்னா நீ ரொம்ப கேள்வி கேக்குற..? ஆம்பளைங்கனா அப்படி இப்படிதான் இருப்பான்.‌. ஏதோ அவசர ஆத்திரத்தில இப்படி பண்ணீட்றான்.. அது அவன் தப்பா..? இவளுங்கள முதல்ல ஒழுங்கா ட்ரெஸ் போட சொல்லு... விளக்கு வச்ச பொறவு வூட்ல அடங்கி கிடக்காம இன்னாத்துக்கு வெளில வராளுங்க..?

# ம்.. ஒருத்தனை பிடிக்கலைனா என்ன பண்ணுவீங்க?...


**அவன் அம்மா, பொண்டாட்டி, அக்கா, தங்கச்சி எல்லாத்தையும் இழுத்து வச்சி அசிங்கமா பேசி நாறடிச்சிடுவோம்ல..

#உடனே அவர் என்ன பண்ணுவார்?........


**பதிலுக்கு அவன் எங்க அம்மா, பொண்டாட்டி , அக்கா, தங்கச்சி எல்லாரையும் டபுளா இழுத்து வச்சி பேசுவான்.. அதான நியாயம்...

#சரி ஊர் உலகத்துல இருக்கிற எல்லா பெண்களையும் தான் மதிக்கிறது இல்ல.. ஆனா உங்க சண்டையில ஏன் அவங்கவங்க சொந்த வீட்டுப்பெண்களையே கேவலப்படுத்துறீங்க?.....


**அப்பதான ஆம்பளைங்களுக்கு அவமானமா இருக்கும்.. ஏன்னா குடும்ப கௌரவமே அந்த வூட்டு பொம்பளைங்க கையில தானே இருக்கு.. மானக்கேடா ஏதாவது செஞ்சா வெட்டி பொலி போட்றனும்... அதான் ஆம்பளைங்களுக்கு அழகு..


#ம்ம்... சில பெண்கள் தவறு செய்றதால எல்லாரையும் குற்றம் சொல்றது சரியா?...........


**சரிதான்... இப்படி சொல்லிக்கிட்டே இருந்தாதான் மத்த பொம்பளைகளும் பயந்து ஒழுங்கா அடங்கி இருப்பாளுங்க..

#அதாவது கோவம் வந்தா கேவலப்படுத்துவீங்க..! வெறி வந்தா வயசு வித்தியாசம் பாக்காம சேதப்படுத்துவீங்க..! சாதாரண மூட்ல இருந்தா மேலே முதல் பாராவுல சொன்ன மாதிரி எல்லா பெண்களையும் வகைக்கு ஒன்னா கமெண்ட்ட சொல்லி உங்களுக்குள்ள நக்கலா சிரிச்சுகுவீங்க..!

அப்ப சந்தோஷமா இருந்தா என்ன சொல்வீங்க?...

**ஆங்!! அப்ப நாங்க கடவுள் ரேன்ஜ்க்கு கொண்டாடுவோம் தெரியுமில்ல!!!


அத விட்டுக்கொடுப்போமா? மார்ச் எட்டு வந்தா எல்லா பொம்பளைங்களுக்கும் குஷியா வாழ்த்து சொல்றோமே..! அதுலேயே புரியலையா..? நாங்க ஆம்பளைங்க உங்களுக்கு எவ்வளவு மதிப்பு, மரியாதை கொடுத்து வச்சிருக்கோமுன்னு..! ஏன்னா, “பெண்கள் நம் நாட்டின் கண்கள்” ஆச்சே!! என்ன..? நான் சொல்றது உனக்கு புரியுதா?

20190208163854982.jpeg

# ஒன்னு மட்டும் நல்லா புரியுது சார்.. நாடு குருடாகி ரொம்ப நாள் ஆகுது.. உங்க வாழ்த்துகளுக்கு நன்றி..!