தமிழ் கடவுளான, முருகனுக்கு நாம் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான ஒன்று. தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும்.
பூச நாளில் புனித நீராடி ஈசனைப் பணிவது தென்னக மக்களின் வழக்கம் என்பதை 'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே' என்று பெருமையோடு கூறுகிறார் திருநாவுக்கரச பெருமான்.
“மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான்
நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்”
மயிலையில் தைப்பூச விழா கொண்டாடியது பற்றியும், அன்றைய தினத்தில் செய்யக்கூடிய அன்னதானம் பற்றியும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று முருக பக்தர்கள், ஆறுபடை வீடுகளில் ஏதேனும் ஒரு முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரையாகக் காவடி எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நார்வே என உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களால் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச திருநாள் அன்று தொடங்கும் எந்த ஒரு நற்செயலும்
நன்மையிலேயே முடியும் என்பது பக்தர்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை.
புராணங்களில் தைப்பூசம்:
தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
பார்வதி தேவி பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியதும் தைப்பூசத்தன்று தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் அன்னை பார்வதியுடன் தில்லையம்பலத்தில் இணைந்து நடனம் ஆடியது தைப்பூசத்தன்று தான்.
பிரகஸ்பதி எனப்படும் குருபகவானின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வது சிறப்பான பலனை அளிக்கும்.
தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த காந்திமதி அம்மனுக்கு நெல்லையப்பராகச் சிவபெருமான் அருள்பாலித்த நாள் தைப்பூச நன்னாளே.
வடலூரில் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தை மாத பூச நட்சத்திரத்தன்று தான் ஜோதியானார். அன்றைய தினத்தில் இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூசத் திருநாளில்தான் திருஞானசம்பந்தர், இறந்து போன பூம்பாவையின் எலும்பிலிருந்து அவரை மீண்டும் உயிர்ப்பித்தார். இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளில்தான் முருகப் பெருமான் வள்ளி பிராட்டியை மணந்து கொண்டார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.
தைப்பூச விரதம்:
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை மனமார துதித்து, தேவாரம், திருவாசகம், சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். மாலையில் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று சிவபெருமானையும், முருகப்பெருமானையும் தரிசித்து வரலாம். இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்விற்குப் பிறகு கோயிகளில் அன்னதானம் வழங்குவார்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குகின்றனர். நாற்பத்தெட்டு நாட்கள் விரதம் இருந்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
பழனி தைப்பூசத் திருவிழா:
அறுபடை வீடுகளில் ஒன்றான முருகப் பெருமான் தண்டாயுதபாணியாகக் காட்சி தரும் பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். இக்கோவிலில் தைப்பூச விழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையோடு தினமொரு வாகனத்தில் ரதவீதிகளில் உலா வருகின்றார். ஆறாம் நாளில் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
நடைபெறுகிறது. ஏழாம் நாள் விழாவில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரில் வலம் வருவார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுத்து பாத யாத்திரையாகப் பழனிக்கு வந்து முருகனைத் தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடன்களைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
பழனி முருகப்பெருமானுக்குக் காவடி:
அகத்தியர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளைத் தனது வழிபாட்டிற்காகக் கொண்டு வரும்படி கூறினார். அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் தன் தோளில் சுமந்து எடுத்துக்கொண்டு வந்தான். திருவாவினன்குடி(பழனி) வழியாக வந்த பொழுது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான். பின் புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். இவ்வளவு நேரம் சுமந்து வந்த காவடியை எப்படித் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரி மலை மேல் ஒரு சிறுவன் கோவணத்துடனும் கையில் தண்டத்துடனும் நிற்பதைக் கண்டு, கீழே இறங்கி வரும்படி கேட்டுக்கொண்டான். மலையை விட்டு இறங்காத சிறுவனை இடும்பன் தாக்க முயல, வேரற்ற மரம்போல் இடும்பன் கீழே விழுந்தான். இதனையறிந்த அகத்தியர் முருகனிடம் சென்று வேண்ட, இடும்பனுக்கு அருள் புரிந்து, இடும்பனைத் தன்னுடைய காவல் தெய்வமாக்கிக் கொண்டார். தோளில் இருமலைகளைச் சுமந்து வந்த இடும்பனைப் போலச் சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை காவடியேந்தி தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு இன்றுவரை அருள் புரிந்து வருகின்றார்.
காவடிகளில் பல வகை உண்டு. அவை...
பால் காவடி, பன்னீர்க் காவடி, மச்சக் காவடி, சர்ப்பக் காவடி, மயில் காவடி, பறவை காவடி, தூக்குக் காவடி மற்றும் அலகு குத்துதல் போன்றவை பல...
மலேசியா பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச வழிபாடு :
மலேசியாவில் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது பத்து மலை முருகன் கோயில். இக்கோயில் தைப்பூச திருவிழா உலகப் புகழ் பெற்றது. தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இவ்விழாவில் போது பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள்.
தைப்பூச திருவிழா பினாங்கில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படும். அன்றைய தினம் அரசு, பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
தைப்பூச திருநாளில் தொட்டது எல்லாம் துலங்கும்:
தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
தைப்பூசத் திருநாளில் குழந்தைகளுக்குக் காது குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன. இத்தைப்பூசத் திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். தைப்பூச நாளின் போது முருகனை வழிபட்டால், கணவன் - மனைவி இடையே ஒற்றுமையும், குடும்பத்தில் செல்வமும் பெருகும்.
இந்த வருடம் தைப்பூசம் வரும் பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபட்டு நற்பலன்களைப் பெறுவோம்..!!
Leave a comment
Upload