தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 ம் தேதி உலகெங்கிலும் கிறித்துவர்கள் மட்டுமல்லாமல் அனைவராலும் விரும்பிக் கொண்டாடப்படுகின்றது. அமெரிக்காவில் அனைத்து மக்களும் கிறிஸ்துமஸ் மரத்தை வாங்கி, வீட்டின் வரவேற்பறையில் வைத்து, அதனை அலங்கரிப்பது, பரிசுகள் பரிமாறிக்கொள்வது, வாழ்த்து அட்டைகள் அனுப்புவது, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உண்ணுவது என மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
பெற்றோர்கள் குழுந்தைகளுக்குப் பரிசுகளை கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில கிறிஸ்துமஸ் க்கு முந்தினநாள் இரவு வைப்பார்கள். ஆனால் சிறு குழுந்தைகளுக்கு ஒரு கதை சொல்லப்படும். கிறிஸ்துமஸ் முந்தினநாளிரவு கிறிஸ்துமஸ் தாத்தா புகைப்போக்கியின் வழியாக நுழைந்து, அந்த வீட்டு குழந்தைகள் ஆசைப்படும் பரிசை கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் வைத்து விட்டு போவார் என கற்பனை கதைகள் உள்ளன. குழந்தைகளும் இதனை உண்மை என நினைத்து கிறிஸ்துமஸ் தினத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். மக்கள் முக்கியமாக இதற்காகவே பெரிய மரங்களை வாங்கி, மிகவும் கலைநயத்துடன் குடும்பமாக சேர்ந்து, அலங்கரித்து விமரிசையாக கொண்டாடுவார்கள். பிள்ளைகளுக்கு கொடுக்கும் பரிசுகள் அவர்கள் வாழ்க்கையில் என்றென்றும் மலரும் நினைவுகளாக இருக்கும்.
பழைய காலத்தில் மக்கள் கிறிஸ்துமஸ் மரத்தை உணவுப்பொருட்களால் அலங்கரித்தனர். அதற்குப் பின்னர் மெழுகுவர்த்திகளை ஏற்றி அலங்கரித்தனர். ஆனால் காலப்போக்கில் இவை மாறி மின்சாரவிளக்குகள், குட்டிபொம்மைகள்,கிறிஸ்துமஸ் மணிகள்,பனித்துகள்கள்,கிறிஸ்துமஸ் குமிழ்கள், சாக்கலேட்டு குச்சிகள்,ஒளிரும் நட்சத்திரங்கள் மற்றும் பலவித கலைநயமான பொருட்களால் அலங்கரிக்கப்படுகின்றது. கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் ஒரு பெரிய நட்சத்திரம் வைக்கப்படும். அலங்காரப் பொருட்கள் பெரும்பாலும் சிவப்பு, பச்சை, வெண்மை மற்றும் தங்க நிறத்தில் இருக்கும்.
நம் நாட்டில் கொலுவுக்கு செய்யும் செயல்களைப் போலவே இங்கும் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அலங்காரப் பொருளை சேர்ப்பார்கள். தலைமுறைகளை கடந்து வந்த அலங்காரப் பொருட்களும் இடம்பெற்றிருக்கும். மக்கள் அவரவர்களின் கற்பனைதிறனை உபயோகித்து, பிடித்தமானவற்றையெல்லாம் மரத்தில் அலங்கரிப்பார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் கிறிஸ்துமஸ் மரத்தின் அலங்காரப்பொருட்களும், அந்த குடும்பத்து மக்களின் ஆளுமை, விருப்பங்கள், நினைவுகள், பொழுதுபோக்கு, சாதனைகள் முதலியவற்றைப் பிரதிபலிக்க கூடியதாக இருக்கின்றது. இத்தனை பிரபலமான கிறிஸ்துமஸ் மரத்தை, கிறிஸ்துமஸ் க்கு வீட்டிற்குள் வைத்துக் கொண்டாடும் பாரம்பரியம் அமெரிக்காவிற்கு எப்படி வந்தது என்றுப் பார்க்கலாம்.
பண்டைய காலத்தில் எகிப்தியர்களும், ரோமானியர்களும் பசுமையான மரங்களின் (Evergreen trees ) கிளைகளை வீடுகளிலும், கோவில்களிலும் அலங்கரித்து வந்தார்கள். இதற்குப்பிறகு ஜெர்மானியர்கள்தான் கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டிற்குள் வைக்கும் வழக்கத்தை கொண்டு வந்தார்கள். ஜெர்மானியர்கள் அமெரிக்கா வந்தப்பிறகு இந்த பாரம்பரியத்தை அங்கு கொண்டு வந்தார்கள். நாம் இதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.
எட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மதப்பிரசாரம் செய்துவந்த அருட்தந்தை புனித போனிபேஸ் கிறித்துவ மக்களிடையே இருந்த பல மூட நம்பிக்கைகளை எதிர்த்து வந்தார். ஐரோப்பியரிடையே மரங்களை வழிபடும் வழக்கம், அவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியபிறகும் தொடர்ந்ததை பாதிரியாக கவனித்து, அவர்கள் வழிபடும் மரத்தை வேர்பகுதியுடன் சேர்ந்து வெட்டி எறிந்தார். சில நாட்களிலேயே அதே இடத்தில் ஒரு Fir மரகன்று முளைத்து எழுந்தது. ஒரு வருடத்திற்குள்ளகாவே Fir மரம் நன்கு பெரியதாக வளர்ந்தது மக்கள் இதனை கடவுளின் வடிவமாக நினைத்தார்கள், பாதிரியாரும் இதனைக் கவனித்து ஜெபிக்க ஆரம்பித்தார். இந்த வரலாற்று சம்பவத்திலிருந்து தான் என்றும் பசுமையான மரங்கள் (Evergreen trees) கிறிஸ்துமஸ் விழாவில் இடம்பெற காரணமாக இருந்ததாக தெரிய வந்தது. ஆனாலும் அப்போது இந்த மரம் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்படவில்லை.
இதற்குப்பிறகு பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King) பனிபொழியும் நாளில் வெளியே நடந்துப் போகும்போது பசுமை மரங்களின் (Evergreen trees) மேலே இருந்த பனி, நிலவு வெளிச்சத்தில் அழகாக ஒளிவீசி இருந்ததைப் பார்த்து ஒரு Fir மரத்தை (ஊசியிலை மரவகை), வீட்டிற்கு எடுத்து வந்து, மெழுகுவர்த்தி வைத்து ஒளிரூட்டி குடும்பத்தினருக்கு காண்பித்தார். பின்னர் கிறிஸ்துமஸ் விழாக்களில் பயன்படுத்தியதாக இன்னொரு தகவல் உள்ளது. இப்படிதான் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் வந்ததாகக் கூறப்படுகின்றது.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனி இளவரசர் ஆல்பர்ட்டும் அவருடைய மனைவி இங்கிலாந்து அரசி விக்டோரியாவும் வின்சர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து வைத்ததாக லண்டன் செய்திதாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குப்பிறகு தான் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படுவது பிரபலமானது. அந்த காலத்தில் விக்டோரியா ராணி என்ன செய்தாலும், அது எல்லா பகுதியிலும் பிரபலமாகிவிடும்.
ஜெர்மானியர்கள் அமெரிக்கா வந்தப்பிறகு இந்த வழக்கத்தை அங்கும் கொண்டு வந்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள், ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு அமெரிக்காவில் வருடத்திற்கு வருடம் கிறிஸ்துமஸ் மரத்தின் விற்பனை அதிகமாகிக் கொண்டே இருந்தது.
ஐரோப்பியர்கள் 4 அடி உயரம் உள்ள சிறிய மரங்களைத் தான் உபயோகப்படுத்தினார்கள். ஆனால் அமெரிக்கா மக்கள் தரையிலிருந்து கூரை வரை உயரம் உள்ள மரங்களைத்தான் விருப்பப்பட்டு வைக்க ஆரம்பித்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் வீட்டிலே தயாரிக்கும் பொருட்களை வைத்து கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தனர். ஆனால் ஜெர்மானிய அமெரிக்கர்கள் ஆப்பிள், கொட்டைகள்,குக்கிகள் என உபயோகப்படுத்தினார்கள். பாப்கார்ன் வண்ணம் அடிக்கப்பட்டு, அவற்றுடன் பெர்ரியும், கொட்டையும் சேர்த்து அலங்காரத்திற்கு பயன்படுத்தினார்கள். மின்சாரம் வந்தப் பிறகு கிறிஸ்துமஸ் விளக்குகள் வைத்து ஒளிரூட்டப்பட்டது. கி.பி 1960-களில் தான் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் பிரபலமானது. இவைகள் நீடித்து இருப்பதாலும் மற்றும் அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்க ஏதுவாக இருப்பதாலும் பிரபலமானது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் Rockefeller center -ல் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒவ்வொரு வருடமும் இதனைக் காண 125 மில்லியன் மக்கள் வருவதாக சொல்லப்படுகின்றது. முதன்முதலாக 1931-ல் இங்கு சிறிய மரமாக வைக்கப்பட்டது. தற்போது மரம் 25,000 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காணப்படும்.
அமெரிக்கா முழுவதும் அநேகமாக எல்லா வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் கிறிஸ்துமஸ் மரம் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டு அனைவராலும் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்படுகின்றது.
கிறிஸ்துமஸ் மரம் இத்தனை வரலாறுகளை கடந்து வந்திருந்தாலும் இன்னும் அதே மகிழ்ச்சியுடனும், குதூகலத்துடனும் கிறிஸ்துமஸ் விழாவில் வைத்து கொண்டாடப்படுகின்றது.
Leave a comment
Upload