தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 2 - ரேணு மீரா

20231107121114922.jpg

"எழு பிறப்பும் தீயவை தீண்டாமை பழிபிறங்காப்

பண்புடை மக்கள் பெரின் "

பிறரால் பழிக்கப்படாத நற்குணம் நிறைந்த மக்களை பெற்றால் அந்த பெற்றோரை ஏழு பிறவியிலும் துன்பங்கள் சேரா என்ற வள்ளுவரின் குறல் போல தான் வாழ வேண்டும் என்ற ஆசை அனைத்து பெற்றோர்களுக்கும் உண்டு.

ஆனால் இது குழந்தைகள் மூலம் நமக்கு கிடைப்பது அல்ல நாம் தான் இத்தகைய கலையின் ( குழந்தை வளர்ப்பு கலை)

நுணுக்கங்களை கற்றுத் தேர வேண்டும்.

உலகின் மற்ற அனைத்து கலைகளையும் கற்றுக்கொண்ட பின் தான் திறமையை ஊரறிய செய்ய வேண்டி இருக்கும் ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது மட்டும் குழந்தைகளை பெற்றவுடன் நாம் பெற்றோராக அரங்கேற்றத்திற்கு தயாராக வேண்டும்.

இந்த கலையில் மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் இருக்கும், ஒவொரு நிமிடமும் ஒரு வளர்ச்சிக்கு உட்பட்டது.... நாம் அதற்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் அப்டேட் என்பதுபோல்....

முதல் மூன்று வருடம் மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் தருணம் முதல் மற்ற ருசிகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது என்பது முதல் பாடத்தின் முக்கிய பகுதி ஆகும். குழந்தையையும் தாயையும் முதலில் உணர்வு பூர்வமாக இணைப்பது பாலூட்டும் தருணமே.....

20231107123812964.jpg

இதில் அதிக கவனம் தேவை. பால் கொடுக்கும் போது தான் தாயின் சிந்தனை சிதறாமல் இருப்பது நலம். குழந்தைகளிடம் நேர்மறை வார்த்தைகளை பேச வேண்டும்" நீ நல்லா படித்து பெரிய ஆளாக வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் " என்பதை அழுத்தம் கொடுப்பதை விடுத்து நல்ல பண்புகளையும் பாசத்தையும் விதைத்தல் நல்லது. அந்த பால் கொடுக்கும் நேரத்தில் முக்கியமாக குழந்தைகளை உரிமையில் அழைக்கக் கூடாது அதாவது நீங்கள் என்று அழைத்து பேச வேண்டும். நீங்க, சரிங்க, உங்களை, என்று மரியாதையாக அழைத்து பேச வேண்டும் அப்போது அவர்கள் வளர்ந்து பேச ஆரம்பிக்கும்போது மற்றவர்களை ஒருமையில் பேச மாட்டார்கள்.

20231107123853863.jpg

ஒன்றரை வயது குழந்தையின் முன் பெற்றோர்கள் அன்னியோன்யமாக இருத்தல் நலம், கணவரிடம் மனைவியும் மனைவியிடம் கணவரும் அன்பாகவும் நல்ல ஆரோக்கியமான விஷயங்களை பேசுவது நலம். இங்கும் நேர்மறை சொற்களை பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்களை வீட்டில் காட்டுவதை தவிர்த்தலும் வீட்டில் ஏற்பட்ட அசவுகரியங்களை வெளிக்காட்டவோ குழந்தையின் முன் பேசவோ செயலாகவோ பகிரக்கூடாது.ஒன்றரை வயது அல்லது இரண்டு வயது தானே அவர்களுக்கு புரியாது என்று நினைப்பது தவறு.

20231107123938427.jpg

பெற்றோர்களுக்கு முதலில் பொறுமை அவசியம். குழந்தை தூங்கிய பிறகு பேசலாம் அல்லது குழந்தைகள் தாத்தா பாட்டி இடம் இருக்கும் நேரத்தில் தன் அறையில் கதவை மூடிக்கொண்டு பேசலாம்.

குழந்தைகளுக்கு புரியாது அவர்கள் பொம்மை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி நீங்கள் பேசும் அல்லது செய்யும் எதிர்மறை விஷயங்களை குழந்தைகள் உள்வாங்குகின்றனர் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு இரண்டரை வயது ஆகிறதா? இதுதான் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லும் சரியான தருணம். அதாவது அவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகப்படுத்தும் கதைகளை காணொளி மூலமாகவோ ஸ்மார்ட் போன் மூலமாகவோ ஸ்மார்ட் டிவி மூலமாகவோ காட்டுவதை விட அவர்களுக்கு நீங்களே கற்பனை செய்யும் சில விஷயங்களில் கதைகளாக சொல்லி பழகுங்கள்.

அதாவது "பெரியது சிறியது."

"அதிகம் குறைவு".

"மேலே கீழே."

"உள்ளே வெளியே"

இப்படி அளவு, இடம், போன்றவற்றை ஒரு கற்பனை கதைகளாக கைகள் மூலம் காட்டி உங்கள் குரலின் மூலம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் உங்கள் கண்களை பார்த்து புரிந்து கொள்ளும் திறன் அவர்களுக்கு அதிகரிக்கும்.

எப்போதுமே கைபேசியையோ, லேப்டாப் மானிட்டரையோ, டிவியிலோ காணொளிகளை தொடர்ந்து பார்க்கும் குழந்தைகளுக்கு எதிரிலோ அல்லது பக்கத்திலோ இருந்து பேசுபவர்களை கவனிக்கும் பழக்கம் வருவது கடினம் மூன்று வயது வரை குழந்தைகளுக்கு நீங்களே எல்லா விஷயத்தையும் கதைகள் போல சொல்லுவது அவர்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும்.

20231107124026546.jpg

தொடர்ந்து பேசுவோம்...