தொடர்கள்
ஆன்மீகம்
தேஜோவதி 7 - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

"ஸ்ரீபுஷ்கலாதேவி ஸ்ரீமஹாசாஸ்தாவுடன் சபையில் வீற்றிருக்கும் அழகு"

20240124234243288.jpg

ஸ்ரீபுஷ்கலாதேவி மீதான ஸ்லோகம் கீழ்கண்டவாறு வர்ணிக்கின்றது:

“த்வினேத்ரம் த்விபுஜம் பீதாம் கிரீட மகுடோஜ்வலாம்

பாசஹஸ்தாம் மனோக்ஞாங்கீம் ஸர்வாபரண பூஷிதா

ஈஷத்குஞ்சித வாமாங்க்ரீம் சாஸ்த்ருவாமஸ்திதாம் சுபாம்

த்யாயேச்ச புஷ்கலாம் தேவீம் சாஸ்த்ரு பத்னீம் குணோஜ்வலாம்”

இரு திருக்கண்களுடனும் இரு திருக்கைகளுடனும், எல்லா ஆபரணங்களும் பூண்டு பொன் நிறத்துடனும், தலையில் கிரீடம், கையில் பாசம் தரித்து, பல்வகை ஆபரணங்களைப் பூண்டு, நற்குணங்களுக்கு இருப்பிடமாக, ஸ்ரீமஹாசாஸ்தாவின் இடது பக்கம் இடது காலை தொங்கவிட்டு வீற்றிருக்கிறாள்.

மற்றுமொரு த்யான ஸ்லோகம் ஸ்ரீபுஷ்கலா தேவியை பின்வருமாறு வர்ணிக்கின்றது:

“சியாம தேஹாம் த்வினேத்ராஞ்ச

த்வி புஜாஞ்சத்விபாதம்

லம்பிதம் வாமபாதந்து

தக்ஷினேச சுகாசனம்

தக்ஷினே புஷ்ப ஹஸ்தஞ்ச

வாமே ஊரு ஹருஸ்தம்

சிம்ஹ குண்டலம் கர்ணாஞ்ச

கனகாம்பரதாரிணீம்”

கருத்த திருமேனி, இரு திருக்கண்கள், இரு திருக்கைகள், இரு திருப்பாதங்கள், இடதுகால் தொங்கவும், வலதுகால் சுகாசனத்திலும், வலது கையில் அல்லிமலரைப் பிடித்தும், இடது கையை தொடைமேல் வைத்தும், திருக்கதுகளில் சிங்கக் குண்டலங்கள் திகழவும், பட்டாடை உடுத்தும் ஸ்ரீபுஷ்கலா தேவி வீற்றிருக்கிறாள்.

ஸ்ரீபூர்ணாதேவி ஸ்ரீமஹாசாஸ்தாவுடன் சபையில் வீற்றிருக்கும் அழகு

ஸ்ரீபூர்ணாதேவி மீதான த்யான ஸ்லோகம் கீழ்கண்டவாறு வர்ணிக்கின்றது:-

“த்விநேத்ரம் த்விபுஜாம் ஸ்யாமம்

கரண்ட மகுடான் விதாம்

வாதோத்பல ஸம்யுக்தாம் சாஸ்த்ரு

தக்ஷஸ்திதாம் சுபாம்

கிஞ்சித் குஞ்சித தக்ஷரங்க்ரீம்

ஸர்வாபரண பூஷிதாம்

த்யாயேத் பூர்ணாம் மஹாதேவீம்

சாஸ்த்ரு பத்னீம் குணோஜ்வலாம்”

இரு திருக்கண்களுடனும், கரு நிறத்துடனும், கரண்டமகுடத்துடனும், தாமரைப் புஷ்பம் ஏந்திய, வரமளிக்கும் இரு திருக்கைகளுடனும், எல்லா ஆபரணங்களும் பூண்டு, ஸ்ரீமஹாசாஸ்தாவின் வலது பக்கத்தில், வலது டகாலை தொங்கவிட்டுக்கொண்டு வீற்றிருக்கும் சாஸ்தாவின் பத்தினியும், சகல நற்குணங்களுக்கும் இருப்பிடமானவளாக வர்ணிக்கிறது.

மற்றுமொரு த்யான ஸ்லோகம் பின்வருமாறு வர்ணனை செய்கிறது.

“பூர்ணாம்பாம் கனகாபாசாம்

த்வினேத்ராம், த்வி பிஜான்விதாம்

தக்ஷே நம்பிதம் பாதம்

வாம பாதம் சுகாசனம்

புஷ்பம் வமகரேச்சைவ

தக்ஷிணே ஊருஹஸ்தம்

ஸ்யாம வஸ்த்ர தரான்

சைவ கர்ணே மகர குண்டலம்.

பொன்னொளி வீசவும், இரு திருக்கண்களுடனும், இரு திருக்கரங்களுடனும், வலது கால் தொங்கவும், இடதுகால் ஸுகாசனத்திலும், இடது கையில் தாமரை மலரைப் பிடித்தும், வலது கையைத் தொடை மேல் வைத்தும், நீலப்பட்டாடை உடுத்தும், திருக்கதுகளில் மகர குண்டலங்கள் திகழவும் பூர்ணா தேவியார் சாஸ்தாவின் வலது பக்கம் வீற்றிருக்கிறாள்.

பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின் திருவுருவ லாவண்யம்/லக்ஷணம்

ஸாமுத்திரிகாலக்ஷண சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள முப்பத்தியிரண்டு அங்கலக்ஷணங்களுக்கு ஏற்ப

  • வயிறு, தோள், நெற்றி, நாசி, மார்பு, கயடி ஆகியவை உயர்ந்தும்,
  • கண்கள், கன்னம், மூக்குநுனி, உள்ளங்கை, நடு மார்பு, ஆகியவை நீண்டும்,
  • குறி, கணைக்கால், நாக்கு, முதுகு ஆகியவை குறுகியும்,
  • முடி, தோல், விரல் கணுக்கள், நகங்கள், பற்கள் ஆகியவை சிறுத்தும்,
  • தலை மற்றும் நெற்றி அகன்றும்,
  • கடைக்கண்கள், உள்ளங்கால்கள், உள்ளங்கைகள், நாக்கு, நகம், அண்ணம், உதட்டின் ஓரம், ஆகியவை சிவந்தும்,
  • மார்பு, கழுத்து, நாபி ஆகியவை, ஆழ்ந்தும்,

அதிரூபலாவண்யனாக, ஸர்வாங்க சுந்தரனாக, ரத்தினங்களால் இழைக்கப்பட்ட பொன்னாலான சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகே அழகு.

ஸ்ரீபுஷ்கலாதேவியின் லக்ஷணம்

பிரதிஷ்டாவிதியில் ஸ்ரீபுஷ்கலாதேவியின் லக்ஷணம் பற்றி கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

“புஷ்கலாம் வாம பாகேது ஸ்யாம

வர்ணாம் கனஸ்தனீம்

கிரீட முகுடோ பேதாம்

ஸர்பாரண பூஷிதாம்”

ஸ்ரீபுஷ்கலாதேவி கருத்த் மேனி, பெருத்த தனங்கள், கிரீடம் தரித்து ஸர்வாபரண பூஷிதையாக ஸ்ரீமஹாசாஸ்தாவின் இடது பக்கம் வீற்றிருப்பாள்.

“புஷ்கலாம் தக்ஷிணே புஷ்பம்

வாமே வரதா பவேத்

வாமேது லம்பிதம் பாதம்

தக்ஷிணேன குஞ்சிதம்”

ஸ்ரீபுஷ்கலாதேவி வலது கையில் மலர்,இடது கையில் வரத முத்திரை, இடது காலை தொங்கவிட்டு, வலதுகாலை மடித்து வைத்து ஸ்ரீமஹாசாஸ்தாவின் இடது பக்கம் வீற்றிருப்பாள்.

ஸ்ரீபூர்ணாதேவியின் லக்ஷணம்

பிரதிஷ்டாவிதியில் ஸ்ரீபூர்ணா தேவியின் லக்ஷணம் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“பூர்ணாம் வா கனக பாசாம்

நீலோத்பல தராம் வராம்

கரண்ட மகுடோ பேதாம்

தக்ஷபார்வே து ஸம்ஸ்திதாம்”

ஸ்ரீபூர்ணாதேவி பொன்னிறத்துடன், நீலோத்பல மலரை ஏந்தியவளாக கரண்ட மகுடம் பூண்டு சாஸ்தாவின் வலது பக்கம் வீற்றிருப்பார்.

“வாமே கரேச புஷ்பம்ஸ்யாத்

தக்ஷிணே லம்பிதம் கரம்

குஞ்சிதம் வாம பாதம் து

தக்ஷிணே லம்பிதம் பவேத்”

ஸ்ரீபூர்ணாதேவி இடது கையில் மலர் ஏந்தி, வலது கையை தொங்கவிட்டும், இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டுக் கொண்டும் ஸ்ரீமஹாசாஸ்தாவின் வலது பக்கம் வீற்றிருப்பாள்.

அடுத்த வாரம் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா வீற்றிருக்கும் சபையின் அழகும் அருட்கோலமும் மணிதாசர் வாயிலாக……