(இராமர், இலக்ஷ்மணர், சுக்ரீவன், ஹனுமார் மற்றும் வானரப்படை - தாய்லாந்து)
இராம வழிபாடு என்பது நம்முடைய பாரத திருநாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதற்கு சான்றாக உலகின் பல்வேறு நாடுகளில் இராமரை வணங்கியும், இராமாயண காவியத்தையும் மக்கள் கண்டும் கேட்டும் களித்து வருகிறார்கள். பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் நிலவிவரும் இராம வழிபாட்டையும் இராமாயண காவியத்தையும் கீழே நாம் பார்ப்போம் :
இராமாயண கதையின் ஒரு பகுதி - தாய்லாந்தின் தலைநகரமான பேங்காக்கில் உள்ள பிரதான அரண்மனை ஓவியங்கள்
ராமகீர்த்தி எனப்படுகின்ற ராமகியன் என்ற இராமாயண காவியம் தாய்லாந்து நாட்டில் தொன்று தொட்டு வழங்கப்படும் ராமாயண காவியம் ஆகும். இது பொதுவாக நாடக வடிவில் மக்களுக்கு ராமாயணத்தை புரிய வைக்கும் ஒரு முறை. இந்த நாடகத்தின் கதாபாத்திரங்கள் பொதுவாக நம்முடைய ராமாயணத்தில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களே ஆகும். அவர்கள் நாடகத்தில் நடிக்கும் கதையும் நம்முடைய வால்மீகி ராமாயணத்தை சார்ந்து உள்ளது. ராமாயணக் கதை நீண்ட நெடுங்காலமாக தாய்லாந்தில் நிலவி வந்தாலும், சக்ரி வம்சத்தில் தோன்றிய ஆறாம் ராமச்சக்கரவர்த்தி (King Rama VI) ஆட்சி காலத்தில் இந்த இராமாயண நாடகம் அனைவருக்கும் புரியும் படியாக இயல்பு வடிவில் அமைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த மாற்றமும் அடையாமல் இராமாயண நாடகம் நடைபெற்று வருகிறது.
இராவணன் - தாய்லாந்து கருட முத்திரை - தாய்லாந்து
தாய்லாந்து ராஜ வம்சத்தில் முடி சூட்டிக் கொள்ளும் எந்த மன்னரும் ராமச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறார்கள். தாய்லாந்திலும் அயோத்தியா என்று ஒரு ஊர் உள்ளது. ஒரு காலத்தில் தாய்லாந்தின் தலைநகரமாக திகழ்ந்த அந்த ஊர் பிற்கால படை எடுப்புகளுக்குப் பிறகு தன்னுடைய புகழை இழந்தது. இப்பொழுது அந்த ஊர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊராக தாய்லாந்து மக்களால் பார்க்கப்படுகிறது. தாய்லாந்தின் முக்கியமான 500 புத்த பிக்ஷுக்கள் இந்த வருடம் பாத யாத்திரையாக தாய்லாந்தில் உள்ள அயோத்தியாவிற்கு ஜனவரி 21ஆம் தேதி வருகிறார்கள். அனுமார் உடைய சிற்பங்களும், கருடனுடைய சிற்பங்களும், பெருமாளுடைய சிற்பங்களும், ராவணனுடைய சிற்பங்களும் இன்றும் நாம் தாய்லாந்தில் காணலாம். தாய்லாந்தின் அரச முத்திரையே கருடன் தான்.
இராமாயண ஓவியம், இராமாயண நாடகம் மற்றும் இராமாயண கவி ஓலைச்சுவடியிலிருந்து - ஜாவா (இந்தோனேஷியா)
இதே போல சாவகத்தீவு என்று அழைக்கப்பட்ட ஜாவாவிலும் காக்காவின் ராமாயணம் என்ற பெயரில் நம்முடைய ராமாயண காவியம் நாடக வடிவில் அரங்கேறி வருகிறது. காவியம் என்ற சொல்லே காக்காவின் என்று மருவி உள்ளது. காவிய வடிவில் ராமாயணத்தை கூறுவதே காக்காவின் ராமாயணம். சமஸ்கிருத சொற்களையும், சமஸ்கிருத சந்தங்களையும், சமஸ்கிருத நடையையும் இன்றும் தன்னுடைய நாடக வடிவில் கொண்டுள்ளது.
இராமர் பொம்மலாட்டம், இராமாயண நிழல் சித்திரம், இராம நாடகம் ஆடக்கூடிய கலைஞர்கள் - மலேசியா
மலேசியாவில் ஹிக்காயத் (கதை) ஸெரி(ஶ்ரீ) ராம என்ற பெயரில் ராமாயணக் கதை உள்ளது. பொம்மலாட்ட வடிவாகவும், நிழல் சித்திர வடிவமாகவும் ராமாயண கதை அனைவருக்கும் முக்கியமான விசேஷங்களின் பொழுது கூறப்படுகிறது.
இராம நாடக காட்சி மற்றும் ராமாயணத்தில் வரும் அசுரர்கள் - லாவோஸ்
லாவோஸ் நாட்டில் ‘ப்ரா லக் ப்ரா ராம்’ என்ற புத்தகம் தேசிய புத்தகமாக உள்ளது. இந்த நூல் இராமரையும், இலட்சுமணரையும் அவர்களுடைய வாழ்க்கையும் பற்றி கூறுகின்ற இராமாயண கதையாகும்.
இராமாயண படங்கள், சிற்பங்கள் மற்றும் இராம நாடகம் - கம்போடியா
கம்போடியாவில் ராமாயணத்தை ரீம் கேர் (ராமனின் புகழ்) என்று கூறுவார்கள். இராமாயணத்தை பற்றிய புடைப்புச் சிற்பங்கள், நாடகங்கள் மற்றும் பல்வேறு வகையான புத்தகங்களும் கம்போடியாவில் கிடைக்கும்.
பர்மிய ராமனும் சீதையும், ராமநாடகம் போடுவதற்கு தேவையான அலங்காரங்கள் - பர்மா
பர்மாவில் ராமாயணத்தை யாமாயணா என்றும் ராம நாடகத்தை யாமாயணா ஜட்டாவ் என்றும் அழைப்பர். இராமாயணம் அவர்களின் தேசிய கதையாகும்.
இராம நாடகம் மற்றும் சுக்ரீவன் - பாலி (இந்தோனேஷியா)
இந்தோனேஷியாவில் உள்ள பாலித் தீவிலும் இராமாயணம் நாடகமாக போடப்படுகிறது. இராமாயணத்தை அவர்கள் அனைத்து விதமான விசேஷங்களுக்கும் பண்டிகைகளுக்கும் நாடகமாக போட்டு கண்டு களிப்பார்கள்.
இராமாயண சிற்பங்கள், இராமாயண நாடகம் - வியட்நாம்
வியட்னாமில் ‘த்ரூயென் க்யு’ என்ற பெயரில் ராமாயணம் நாடகமாக போடப்படுகிறது. அங்கும் புடைப்புச் சிற்பங்களும் கல் சிற்பங்களும் இராமாயணக் கதைகளை மிகுதியாக நமக்கு காட்டி கொடுக்கிறது.
இராம நாடகம் - மங்கோலியா
மங்கோலியாவில் ராமாயணத்தை தரி ராமா என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
இன்னும் இலங்கை, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், புருணே போன்ற பல நாடுகளில் ராமாயணத்தை புத்தகமாகவும் நாடகமாகவும் சிலைகள் ஆகும் சிற்பங்களாகவும் வண்ண படங்களாகவும் பொம்மலாட்டமாகவும் நிழல் சித்திரமாகவும் இன்னும் பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறார்கள். தெற்காசிய நாடுகள் மட்டும் இல்லாமல் சில ஐரோப்பிய நாடுகளும் ராமாயணத்தை வேறு விதமாக கதையின் கரு மாறாமல் நாடகமாக அமைத்துள்ளார்கள்.
Leave a comment
Upload