"உங்களுக்கும் அவர் மாதிரி ஒரு நிலைமை வரும் தாத்தா...!" - குண்டுராஜா சாபமிட்டான்.
சுப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னடா சொல்ற?" என்று கேட்டார்.
"உங்க காலம் இப்படியே போய்கிட்டு இருக்கும்னு கனவு காணாதீங்க. ஒரு நாள் மோடி தொங்கு பார்லிமென்ட் மாதிரி உங்க நிலைமை ஆகத்தான் போகுது...!"
"ஏண்டா குள்ள குண்டுப் பையா, எனக்கே சாபம் விடுறியா? நான் உங்களுக்காக எவ்வளவு தியாகம் பண்ணியிருக்கேன், என் வாழ்க்கையிலே...?"
"இருக்கலாம். ஆனா, இப்போ என்ன வெங்காய தியாகம் பண்ணி தொலைச்சீங்க? ஆசையா என் பொண்டாட்டிய பாட கூட்டிட்டு வந்தா... ஏற்கனவே பேரும் புகழுமா இருக்கிற கமலஹாசன் பொண்ணுதான் வந்து பாடணுமா?"
"இருக்கிறவள் சுருக்குப் பையிலே முடிந்து வைத்திருக்கிறாள்! அவகிட்ட திறமை இருக்கு. அதனால ரகுமான் கூப்பிட்டுப் பாட வைக்கிறார். இதுல என்னடா தப்பு...?"
"ஆமா... ஆமா... அவதான் உங்களுக்கு முதல் டிகாஷன் போட்டு காபி தருவா. ஆத்திர அவசரத்துக்கு ரவா உப்புமா செய்து தருவாள்...?" என்று சுருக்கென்று கேட்ட ருக்குமணியின் கோபத்தின் டெசிபலை அறியாத சுப்பு, ஆதுரத்துடன் அவளது முகவாயைத் தொட்டு, "தோ பாரு, குழந்தை...!" என்க, அவள் தீண்டிய ராவணனை உதறிய சீதை பத்தினியைப்போல உதறினாள் தாத்தாவை.
"இனிமே உங்க சங்காத்தமே வேணாம்...!" என்று கையெடுத்துக் கும்பிட்டான் குண்டு.
சுப்புசாமி தாம் ஒரு திமிர் இழந்த மோடியின் நிலையை உணர்ந்தார்.
"எனக்கென்று யாருடா இந்த உலகத்திலே...? இருக்கிற ஒரு கிழவியும் தெனாவெட்டுப் புடிச்சவ. புள்ளையா...குட்டியா... நீங்கதாண்டா என் உலகம்...!"
தாத்தா அப்படிச் சொன்னதும், குண்டு கண்கலங்கி விட்டான்.
"சரி, சரி உடுங்க...உங்கமேலே கோபப்படாமல் நாங்க பாட்டிமேலேயா பட முடியும்... ருக்கு, தாத்தாவுக்கு சூடா ஒரு கப் காபி போடு...!"
"இந்தாடியம்மா ருக்கு...!" என்ற சுப்பு, ஜிப்பாவில் கையை விட்டு கத்தையாக ஒரு கட்டை எடுத்தார். பத்தாயிரம் ரூபாய் இருக்கும்.
"இதோ நான் முன்பணம் தர்றேன். நிச்சயம் நீ ரகுமான் மியூசிக்லே பாடுவாயடி...!" என்றார்.
பணத்தை வாங்கி, கண்களில் ஒற்றிக்கொண்ட ருக்கு சொன்னாள்:
"மனசிலே ஏதும் வைச்சுக்காதீங்க, தாத்தா. எங்களுக்கு குழந்தை பிறந்தா உங்க பெயரைத்தான் வைப்போம். காப்பி கொண்டு வர்றேன். அப்புறமா உப்புமா சாப்பிட்டுதான் போகணும்...!"
*****
ஶ்ரீமதி கண்ணாம்பாள் பார்ப்பதற்கு கனிவான புஷ்டி ஷகிலா மாதிரி. கோபம் வந்துவிட்டால், விஷாலின் ஒல்லி அண்ணி மாதிரி.
அகல்யாவுக்கு ஷகிலாவை மட்டும்தான் தெரியும்...!
"உட்கார் அகல்... யா...!"
'அந்த...யா... வை ஏன் பிரித்துக் கூப்பிடணு ம்?' என்னமோ நடக்கப் போவதை யூகித்து விட்டாள் அகல்யா.
"என்ன நடந்ததுன்னு என்கிட்ட மறைக்காம சொல்லு அகல்யா..."
"என்ன நடந்தது? என்ன மறைக்கணும்?"
"நான் ரோஜா செடி மாதிரி. முள்ளாகவும் இருப்பேன். ரோஜா பூவாகவும் இருப்பேன்...!" - குரலில் கோபம் தெறித்தது.
"என்ன பிரசிடென்ட்ஜீ... இப்படி பேசறீங்க...?"
"முதல்ல என்ன பிரசிடென்ட்னு அழைக்கிறதை விடு. இப்போ சொல்லு. நீயும் கோமுவும் அங்கே சென்றதாக எனக்கு தகவல் வந்தது. ரஹ்மான் வீட்டில் என்ன நடந்தது?"
நடந்ததை ஒப்பித்தாள்.
"ம்...அப்புறம்...?"
"நான் அவமானப்பட்டதுதான் மிச்சம்...!"
"எனக்கு மட்டும் என்ன வாழுதாம்? ரஹ்மான் நேற்று மெயில் அனுப்பி விட்டார். வர முடியாதென்று. ஏதேதோ காரணம் சொல்கிறார். நான் ஊகித்து விட்டேன். இது அந்த கோமுவின் விளையாட்டு என்று. நீயும் துரோகம் பண்ணி விட்டாயோ என்று சந்தேகித்தேன்...!"
"விசுவாசம்னு கூப்பிட்டுப் பாருங்க, இந்த அகல்யா திரும்பிப் பார்ப்பாள்...!"
"எனக்குத் தெரியாதா உன்னைப் பற்றி? ஒரு கிலாரிபிகேஷனுக்கு கேட்டேன்...!"
"பழி வாங்கணும் கோமுவை, பிரசி..."
"ம்...கோ அஹெட் டியர்...!"
"பிரசிடென்ட்ஜீ...!"
"நிச்சயம் செய்வோம்...!" - அகல்யா சந்தானத்தை சட்னி ஆவது போல இறுக்கி, ஒரு உம்மா கொடுத்தாள் ஶ்ரீமதி.
(அட்டகாசம் தொடரும்...)
Leave a comment
Upload