வி ஐ பி கள் சீசன் சமயத்தில் ஊட்டி பக்கம் வராமல் இருப்பது நல்லது !
கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கத்தால் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. சுற்றுலாவை நம்பி இருந்தவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக முடங்கி மிகவும் கவலைக்குரிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
கொரோனா தாக்கம் குறைந்து சுற்றுலா தலங்களை திறந்தவுடன் இழந்த வாழ்வாதாரத்தை மீண்டும் கைப்பற்றும் திடமான முடிவில் ஊட்டி வியாபாரிகள் இறங்கியுள்ளனர் .
கடந்த மாதம் முதல் சுற்றுலாக்களின் எண்ணிக்கை தினமும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது . சனி, ஞாயிற்று கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் ஊட்டி , குன்னூர் கோத்தகிரி ,கூடலூர் நகரை நெருக்கி விடுகிறது .
காவல் துறை மிகவும் சிரமத்தில் திணறிக்கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது .
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாகவும் , கோத்தகிரி வழியாகவும் வாகனங்கள் ஊட்டியை நோக்கி படையெடுக்க ஊட்டி திணறி கொண்டிருக்கிறது .
காவல் துறையும்,மாவட்ட நிர்வாகமும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல கோத்தகிரி வழியாகவும் ...மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வர பர்லியார் குன்னூர் வழியாக இரு வழி பாதை போக்குவரத்தை அமுல் படுத்தியது .
கடந்த வாரம் பல்கலைக்கழக வேந்தர்களின் சிறப்பு கூட்டத்தை ஊட்டி ராஜ்பவனில் நடத்தி முடித்தார் தமிழக ஆளுநர் ஆர் .எம் .ரவி .
இதற்காக தன் குடும்ப சகிதமாக ஊட்டி வந்த ஆளுநரால் கோவை விமான நிலையம் முதல் ஊட்டி ராஜ்பவன் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது . சுற்றுலாக்களும் உள்ளூர் வாசிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளானது தான் உண்மை .அதே போல அவர் திரும்ப சென்னை செல்ல ஊட்டி முதல் கோத்தகிரி மற்றும் கோவை விமானநிலையம் வரை முழு போக்குவரத்தை நிறுத்தியது காவல் துறை .
ஊட்டி தற்போது சுற்றுலாக்களின் கூட்டத்தால் மொய்த்து கொண்டிருக்கிறது . தினமும் வாகன நெரிசல் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது .காவல் துறை மிகவும் சிரமத்திற்குள்ளாகி திணறி கொண்டிருக்கிறார்கள் . மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் எஸ் .பி .ஆஷிஷ் ராவத் நேரடியாக போக்குவரத்தை எப்படி ஒழுங்கு படுத்துவது என்று வெளியூர் காவல் துறையினருடன் ஆலோசனை நடத்துகிறார்கள். உள்ளூர் காவல்துறையினரிடம் ஆலோசனை செய்தால் நன்றக இருக்கும் என்றும் அதை விட ஊட்டியில் பார்க்கிங் வசதி சுத்தமாக இல்லை .
ஊட்டி நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் தனியார் இடங்களை தேர்வு செய்ய லோக்கல் போலீஸ் முகம் சுளிக்கிறார்கள் ..
ஊட்டி ரேஸ் கோர்ஸில் ஒரு பார்க்கிங் தளத்தை முன்னாள் ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா உருவாக்கி மல்டி பார்க்கிங் தளத்தை உருவாக்க திட்டம் ரெடி செய்தார். அதற்குள் அவரை பணி மாற்றம் செய்ய அந்த திட்டம் கிடப்பில் போட பட்டதால்,தற்போது நகராட்சி பராமரிப்பில் சேரும் சகஜமுமாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன .
சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்க ,கூகுள் மேப் சர்வர்கள் பிசியாகிவிட்டதால் ஊட்டிக்கு வருபவர்கள் வழி தெரியாமல் விழி பிதுங்கி தவிக்கிறார்கள் .சுற்றுலா வருபவர்கள்கடந்த வாரத்தில் மட்டும் 1 .36 லட்சம் பேர் ஊட்டியில் குவிந்துள்ளனர்.இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது .
நீலகிரி முழுவதும் காட்டேஜ்களின் வாடகை இஷ்டத்திற்கு எகிறுகிறது . ரூபாய் 1500 வாடகை அறை தற்போது 4000 முதல் 5000 வரை என்பது ஒரு ஷாக்கிங் தகவல் . உணவு விஷயத்தில் மிகவும் மோசம்... ஊட்டி ஹோட்டல்கள் கடந்த வாரம் உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் ரெய்டு நடத்த பழைய சிக்கன் ஷவர் மாவாக உருவாகுவதை கையும் களவுமாக பிடித்து தடுத்ததால் சுற்றுலா வந்த அசைவ பிரியர்களின் உடல் நலம் காக்கப்பட்டது .
நீலகிரியே திணறி கொண்டிருக்க கேரளா கோட்டகல் இருந்து கூலாக தங்களின் சொந்த ஆட்டோவில் ஊட்டி வந்திருந்தனர் அசைன், அப்துல்சலாம் மற்றும் சையத் அலி ..
" நாங்கள் ரம்ஜான் முடிந்த கையோடு எங்க ஆட்டோவில் முள்ளி மலை பாதை வழியாக 43 ஹேர்பின் பெண்டுகளை கடந்து வந்து இங்கு வந்தோம் ..அப்பாடா என்ன ட்ராபிக் ஜாம் .. திணறிவிட்டோம் .மற்றபடி ஜாலி தான் ..எங்க ஆட்டோவை மாற்றி ஓட்டி கொள்கிறோம் .இப்போ தொட்டபெட்டா போகிறோம் குட் பை " என்று நகர்ந்தனர் .
ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் சுற்றுலாக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது .தோட்டக்கலை துறையினர் 124 வது மலர் கண்காட்சிக்காக தாயர் செய்து கொண்டிருக்கிறார்கள் . மலர்கள் தொட்டிகளில் குவிந்து கொண்டிருக்கிறது . மலர்கள் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க காத்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது .
தோட்டக்கலை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினோம் , " கொரோனா தொற்றுக்கு பின் இரண்டு வருடத்திற்கு பின் இந்த வருடம் 124 வது மலர்கட்சிக்காக ரெடியாகிக்கொண்டிருக்கிறோம் ..290 வகை மலர்கள் போது குலுங்கி கொண்டிருக்கிறது . வருகின்ற 20 ஆம் தேதி நம் முதல்வர் மலர்க்காட்சியை துவக்கி வைக்கிறார் . தமிழக ஆளுநரும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . வெளிநாட்டு மலர்களான டூலிப்ஸ் , கார்லா லில்லி ..ஹைட்ரொஸ் போன்ற ஹொலண்ட் மலர்கள் பார்வைக்கு ரெடி ..
290 புதிய வகைகள் அறிமுகம் படுத்துகிறோம் . தொட்டிகளில் மட்டும் 35 ஆயிரம் மலர்கள் ரெடியாக உள்ளன . இரண்டு வருடமாக வராத சுற்றுலாக்கள் இங்கு வந்து புல் வெளியில் விளையாடுவதை பார்க்கும் போது நமக்கே சந்தோஷமாக இருக்கிறது .இந்த பூங்காவை 1848 ஆம் ஆண்டு மேக் ஐவர் என்றவர் தான் உருவாக்கினார் . ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 25ஆயிரம் வரை சுற்றுலாக்கள் குவிகிறார்கள் . மேலும் லட்ச கணக்கில் வருகை இருக்கும் ..தோட்டக்கலை பணியளர்களின் பணி சிறப்பானது ".
பெங்களுருவில் இருந்து வந்திருந்த ஹேமந்த் ரித்து , ஹர்ஷித் குடும்பத்தினரை சந்தித்தோம் , " ஏற்கனவே ஊட்டி வந்திருக்கிறோம் இப்பொழுது மாஸ்க் மற்றும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வந்துளோம் .ஊட்டியை திணறடிக்கும் கூட்டம் ..ட்ராபிக் ஜாம் ரொம்ப ஜாஸ்தி ..இதில் வி ஐ பி களின் வருகையால் தான் இந்த தொல்லை எங்களை போன்ற சுற்றுலாக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறோம் ..எங்க கர்நாடக மாநிலத்தில் முதல்வர் , கவர்னர் அமைச்சர்கள் பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஒரு வழியில் போய் கொண்டே இருப்பார்கள் ..இங்கு தான் வி ஐ பி களுக்கு போக்குவரத்து நிறுத்தப்படுவது சரியில்லை .வி ஐ பி கள் சீசன் சமயத்தில் ஊட்டி பக்கம் வராமல் இருப்பது நல்லது . ஊட்டியில் ரொம்ப ஹெல்ப் ஆட்டோ ஓட்டுனர்கள் ..பூட் அதிக விலை மற்றும் குவாலிட்டி சரியில்லை ..
மற்றபடி கார்டன் சூப்பர் எங்க பெங்களூரான கார்டன் சிட்டி, பொட்டானிக்கல் கார்டன் தோட்டக்கலைக்கு எங்கள் வாழ்த்துக்கள் " .
கரூரில் இருந்து வந்த உமா நம்மிடம் கூறும்போது , " எங்க ஊரில் வெயில் அதிகம் ஊட்டி போகலாம் என்று வந்து விட்டோம் ..ஏன் வந்தோம் என்று தோன்றுகிறது கூட்டம் போக்குவரத்து நெரிசல் மற்றபடி கூல் கிளைமேட் என்ஜாய் பண்ணுகிறோம் ..
கொரோனாவுக்கு பின் இப்போ தான் குடும்பத்துடன் வருகிறோம் பூக்களை பார்ப்பது ஆச்சிரியமாக இருக்கிறது " .
ஊட்டி படகு இல்லம் கூட்டத்தால் வழிந்து கொண்டிருக்கிறது போட்டிங்கிற்கு கியூவில் நின்று செல்கிறார்கள் ..மினி ட்ரைனில் சிறுவர்களை விட பெரியவர்கள் பயணிக்க துடிக்கிறார்கள் ..
ஒரு கேரளத்து சுற்றுலா தங்களின் இரண்டு வயது குழந்தையை கூட்டத்தில் மிஸ் செய்து தவித்து விட படகு இல்ல ஊழியர்கள் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தது நெகிழிச்சியாய் இருந்தது.
இரண்டு வருடம் வெறிச்சோடி இருந்த ஊட்டி தற்போது தினமும் திணறி கொண்டிருக்கிறது .
Leave a comment
Upload